புது தில்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும், முடிவுகள் அறிவிக்கப் படும் என்று கூறப்பட்ட நாள், நேரத்துக்கு முன்னதாகவே!
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 1.10 லட்சம் பேர் உள்பட நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்த வருடத்துக்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்றே அறிவிக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
CBSE informs that NEET results would be declared today.
— Anil Swarup (@swarup58) June 4, 2018
இருப்பினும், நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்மாக அறிவித்த நிலையில் சற்று முன்னதாக, 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.
Results to be declared by 2 pm today https://t.co/H6tJPt0s3f
— Anil Swarup (@swarup58) June 4, 2018
நீட் தேர்வு முடிவுகள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல்,விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஓசி. பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
இதனிடையே, நீட் தேர்வில் பிழைகள் இருந்த 49 வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் கோரும் வழக்கு நாளை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.