போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28 திங்கள் கிழமைக்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள பள்ளிக் கல்வித் துறை, தற்காலிகமாக பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, மாணவர்களின் படிப்பு கெடுவதற்குக் காரணமாக உள்ள ஆசிரியர்கள், நிர்வாகிகள் கைது செய்யப் பட்டு வருகிறார்கள். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கண்டறியப் பட்டு, அவர்களுக்கு பணியிடை நீக்க உத்தரவு வழங்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், திங்கள் கிழமை திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஒரு சலுகையைக் கொடுத்திருக்கிறது. நீதிமன்றம் 25ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அடுத்த கட்ட சலுகையாக திங்கள் கிழமை வரை வாய்ப்பு கொடுத்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை.