― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்கான்சாகிப்பை எதிர்த்து ... ஆங்கிலேயருக்கு எதிரான போரை நடத்திய மாவீரன் அழகுமுத்துக்கோன் (நவ.18: மறைவு நாள்)

கான்சாகிப்பை எதிர்த்து … ஆங்கிலேயருக்கு எதிரான போரை நடத்திய மாவீரன் அழகுமுத்துக்கோன் (நவ.18: மறைவு நாள்)

- Advertisement -

விடுதலை வீரர் மன்னர் அழகுமுத்துக்கோன் ((1728-18.11.1757) வீரமரணம் அடைந்த நாள்!

நாட்டின் விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்தவர்களின் நினைவை போற்றுவதே சிறப்பு! ஜூலை-11, மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்(1728-18.11.1757) அவர்களின் பிறந்தநாள் என்று தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டு மாநில அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்திய வரலாற்று ஏடுகளில் 1857-ல் தான் முதல் விடுதலைப் போர் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் முதல் விடுதலைப் போர் தமிழகத்தில் தொடங்கிவிட்டது. 1757ல் இடைவிடாது போர்களை நடத்தி நிலம் காத்த பூலித்தேவனைப் போல், விடுதலைப் போரை நடத்திய தமிழ் மன்னன் கட்டாலங்குளம் வீரஅழகுமுத்துக்கோன்!

வீரஅழகுமுத்துக்கோன், கி.பி.1728ல் பிறந்தார். வீரமரணம் அடைந்தது, கி.பி. 18.11.1757இல்!

மன்னர் அழகுமுத்துக்கோன், ராணி அழகுமுத்தம்மாளுக்கு ஆயர் (யாதவர்) குலத்தில் கிருஷ்ண கோத்ரத்தில் பிறந்தவர். வானரவீரர், வானாதிராயர், மிலாடுடையர், சேர்வைக்காரர் என பட்டப் பெயர்களை அலங்கரித்தவர்.

அந்நாளைய திருநெல்வேலிச் சீமையில் உள்ள (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கட்டாலங்குளம் அரண்மனையில் பிறந்தார்.

வீரஅழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். இவருக்கும் ராணி அழகு முத்தம்மாளுக்கும் 1728-ஆம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீரஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ஆம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார்.

1750-ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டிக் கொண்டார்.

1755-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தலைமையில் நடந்த முதல் விடுதலைப் போரில் தம்பி சின்ன அழகுமுத்துக்கோன் பெருமாள் கோயில் வாசலில் வைத்து சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

கப்பம் கட்ட மறுத்து, பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்க மேற்கொள்ளப் பட்ட முயற்சிக்கு தோள் கொடுத்ததால் ஆங்கிலேயருக்கு எதிரியானார் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்.

கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுப் கான்(கான் ஷா கெப்) தலைமையில் ஆங்கிலேயப் படைகளை அனுப்பி வைத்தது. மன்னர் வீரஅழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் (மருதநாயகம்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.
மன்னர் வீரஅழகுமுத்துக்கோனின் குதிரை சுடப்பட்டது. அவரது வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் மன்னர் வீரஅழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற மன்னர் வீரஅழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளான, கெச்சிலணன்கோனார், முத்தழகுக்கோனார், வெங்கடேஸ்வர எட்டுக்கோனார், ஜெகவீரரெட்டுக்கோனார், முத்திருளன்கோனார், மயிலுபிள்ளைகோனார் ஆகியோர் மார்பில் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தனர்.

பீரங்கி முன் நின்று சாகும் வேளையிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவராக இருந்தார் வீரஅழகுமுத்துக்கோன்!

மன்னர் அழகுமுத்துக்கோன் வம்சத்தில் 40 வயதைக் கடப்பதற்கு முன்பே போர்க் களத்தில் அனைவரும் வீரமரணம் அடைந்துள்ளனர். கட்டாலங்குளத்தைக் கடந்து செல்லும் எவரும் குதிரை, யானை, பல்லக்கில் அமர்ந்து செல்லக்கூடாது. கட்டாலங்குளம் சுற்றியுள்ள பாளையக்காரர்களை பதவி இறக்கும் அதிகாரத்தை திருமலைநாயக்கர் தாத்தா கிருஷ்ணப்பநாயக்கரிடம் இருந்து மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் முன்னோர்கள் பெற்றிருந்தனர்.

ஜெகவீரராம பாண்டிய எட்டப்ப நாயக்கர் மகன் வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கருக்கு பெருநாழிகாட்டில் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் முடிசூட்டி வைத்தார் என்பது வரலாறு!

தமிழக வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப் பட்டுவிட்ட வீரன்அழகுமுத்துக் கோன் போன்ற மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், பள்ளிப் பாடங்களில் வைக்கப் பட்டிருந்தால், மாணவர்களுக்கு நம் தமிழ் மண்ணின் வீர மரபு தெரியவரும். அவரின் நினைவு நாளிலாவது, இந்த வீர வரலாற்றை நாம் நினைவுகூர்வோம்!

  • மதுரை கா.ராஜேஷ்கண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version