சிலைக்கடத்தல் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல் உறுதி!
சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் இன்று இரவுக்குள் ஒப்படைத்து விடும்படி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தாம் கட்டுப்பட முடியாது என்று கூறிவிட்டார் பொன்.மாணிக்கவேல்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2019 நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை (இன்று வரை) நியமிக்கப்பட்டிருந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இந்த நியமனம் நடைபெற்றது. இந்நிலையில், பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது!
அவருக்கு பணி நீட்டிப்பு செய்யாத நிலையில், பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலம் நிறைவடைந்ததை ஒட்டி, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை இன்றைக்குள் ஏடிஜிபியிடம் ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பொன் மாணிக்கவேல் பணிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் இன்றைக்குள் ஒப்படைக்கும் படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் பதில் அளித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் அனுமதி இல்லாமல் சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க இயலாது என்று கூறியுள்ளார்.
சிலைக் கடத்தலை விசாரிக்க உயர் நீதிமன்றம் என்னை சிறப்பு அதிகாரியாக நியமித்தது, அதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது! எனவே உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க எனக்கு அனுமதியில்லை என்று பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, சிலைக்கடத்தல் வழக்குகளில், தமிழக அமைச்சர் , ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், திமுக., முன்னாள் அமைச்சர், திமுக., பிரமுகர்கள் சிலர் என ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியிருந்தன.
அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மேகாலயாவுக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டு, அதை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்த முன்னாள் நீதிபதி தஹில் ரமானி, சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வை கலைத்து உத்தரவிட்டதிலும், குறிப்பிட்ட அமைச்சர் நீதிபதி தஹில் ரமானியை சந்தித்துப் பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப் பட்டன.
இதனால், ஆளும் அதிமுக., அரசின் நேரடியான கரங்கள் சிலைக்கடத்தல் விவகாரங்களில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. ஏற்கெனவே அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில் நிலங்களை பட்டா போட்டுக் கொடுக்கும் முறைகேடுகளில் ஈடுபட்ட தமிழக அரசு, பெரிய அளவில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது வெளிப்படையாகத் தெரிய வந்தது.
மேலும் தொடக்கத்தில் இருந்தே, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியான பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தெரிவித்து முட்டுக்கட்டை போட்டது. இதில் இருந்தும், தமிழக அரசுக்கும் அறநிலையத்துறை ஆலய சிலைக்கடத்தல்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக மக்களுக்கு சந்தேகம் வலுத்தது.
கடந்த வாரம், பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வந்த போது, தமிழக அரசு பணி நீட்டிப்பு இயலாது என்றது.
சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இதே போல், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் வரும் 30 தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், கால நீட்டிப்பு செய்ய உத்தரவிட கோரி பொன்மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகளும் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பதவி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு டிசம்பர்2 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அதுவரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றம் அதுபோன்ற எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என பொன்மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் பொன்.மாணிக்கவேலின் பதிலுக்காகவே வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்திருப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி அரசு உயர் நீதிமன்றத்தை மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.
நவம்பர் 30-ம் தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைவதால், அதன் பின் அவரை பணி நீக்கம் செய்ய அரசு முயற்சிப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பொன்மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து கடந்த 2018 நவம்பர் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவை பிறபிக்கும் வரை சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலே நீடிப்பார் என கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்ட நீதிபதிகள், அவரது பதவிக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும், பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பதவி நீட்டிப்பு கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஏதேனும் பாதிப்பு பதவிக்கு ஏற்பட்டால் உடனடியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் எனவும், பதவி நீட்டிப்பு மனுவைப் பொறுத்தவரை தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறபிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அப்போது, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலை கடத்தல் வழக்கு விசாரணைகளில் 2 அமைச்சர்கள் தலையிடுவதாக பொன்மாணிக்கவேல் குறிப்பிட்டுயிருந்தார். அதே நேரத்தில், மேலும் ஒரு அமைச்சர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுகிறார் என குற்றம் சாட்டினார். எனவே, இந்த அமைச்சர்களின் பெயர்களை பொன்மாணிக்கவேல் வெளியிட வேண்டும் என கோரினார்.
இதையடுத்து அனைத்து வழக்குகளின் விசாரணையையும் டிசம்பர்6 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்நிலையில், இன்று திடீரென தமிழக அரசு அனுப்பியுள்ள உத்தரவும், திருடன் கையிலேயே பணப்பெட்டியையும் சாவியையும் சேர்த்துக் கொடுக்க உத்தரவிடுவது போன்றது இது என்றும், அதற்கு பொன்மாணிக்கவேல் அனுப்பிய பதில் தெளிவு என்றும் கருத்துகள் எழுந்து வருகின்றன.