Tidiness is unknown to Indians : சுத்தம் சுகாதாரம் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாது என்பது அவர்களின் வம்பு பிரச்சாரம் .
பாரதியர்களுக்கு சுத்தம் சுகாதாரம் தெரியாதென்றும் இங்குள்ளவர்களைத் தொடுவது ஆரோக்கியத்திற்கு கேடு என்றும் பிரிட்டிஷார் பிரச்சாரம் செய்தார்கள்.
இந்தியர்கள் ஒழுங்குமுறை அற்றவர்கள். அவர்களிடம் நல்ல பழக்கவழக்கங்கள் இல்லை. அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
அதனால்தான் பிரிட்டிஷ் அதிகாரிகள் சாதாரண உடையில் இருந்த இந்திய மக்களை ப்ரூட்ஸ் என்று குறிப்பிட்டார்கள்.
அவர்களை சந்திப்பதற்கோ பார்ப்பதற்கோ கூட விருப்பப்படவில்லை.
பிரிட்டிஷ் அதிகாரிகள் எங்காவது செல்ல வேண்டுமென்றால் அந்தப் பிரதேசத்தில் கிருமிநாசினி மருந்துகளை முன்பாகவே தெளித்தால்தான் செல்வார்கள். நம் தண்ணீரும் உணவும் ஏற்பதற்கு தயங்கினார்கள். ஆங்கிலேய வாரிசுகளான நம்மவர்கள் பலர் இன்னமும் அதே பழக்கங்களை பின்பற்றுகிறார்கள்.
விளைவு:- இத்தகைய பிரச்சாரங்களின் விளைவாக பாரதியரிடம் தாழ்வு மனப்பான்மை பரவியது. நடை உடை பாவனைகளில் ஆங்கிலேயரைப் போல் நடப்பவர்களைத் தம் பக்கத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என்பதால் இந்தியர்களிடம் பலப்பல அந்தஸ்துகள் பிரிவுகள் அந்தஸ்தில் பலப்பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன.
ஆடம்பரமில்லாமல் நம் நாட்டு மக்கள் அணியும் உடைகள் ஆங்கிலேயர்களுக்கு தாழ்வாகவும் அநாகரீகமாகவும் தோன்றியது.
சுவாமி விவேகானந்தரின் உடையை பார்த்துகூட அவர்கள் பரிகசித்தார்கள். “நீங்கள் ஏன் இத்தனை அசுத்தமான உடைகளை அணிகிறீர்கள்? எங்களைப்போல் சூட் பூட் அணிந்து ஜென்டில்மேனாக நடந்து கொள்ளலாம் அல்லவா?” என்று கேட்ட மேலை நாட்டவருக்கு சுவாமிஜி உறுதியாக பதிலளித்தார்.
” எங்கள் நாட்டில் சிறந்த மனிதன், பெரிய மனிதன், ஜென்டில்மேன்… எல்லோரும் தம் பண்பாட்டில் உருவாகுவார்கள். உங்கள் நாட்டைப் போல் தையல்காரரால் அல்ல”.
உண்மை என்ன? பூவுலகில் மிகவும் சுத்தம் சுகாதாரத்தை கடைபிடிப்பது நம் நாடு மட்டும்தான். குளிப்பது என்பது பற்றி அண்மைக் காலம் வரை அறிந்திராத நாடுகளைப் பற்றிய விவரங்கள் நமக்கு வியப்பை அளிக்கின்றன. காலையில் விடிவதற்கு முன்பே எழுந்து பசுஞ்சாணியால் வாசல் தெளித்து, வீடு வாசல் கூட்டி கழுவுவது, கோலம் போடுவது… போன்ற ஆசாரங்கள் வேறு எந்த தேசத்தில் உள்ளன?
ஸ்நானம் செய்யாமல் சமையலறையில் நுழையமாட்டார்கள் நம் வீடுகளில்.
பல் தேய்க்காமல் ஊத்தை வாயோடு பெட் காபி குடிப்பவர்களா நம்மை குறை கூறுவது?
மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நடத்தி வரும் இந்தியர்களின் மேல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மிகவும் கீழான பிரச்சாரம் செய்தார்கள்.
வெளியே சென்று வந்ததும் கால் கழுவாமல் வீட்டிற்குள் நுழையாத பாரதியர்களுக்கு சுத்தம் தெரியாது என்று கூறலாமா?
உணவு உண்ணும் போது எத்தனை சுத்தத்தைக் கடைப் பிடிப்போம் நாம்!
நாம் கையால் உணவு சாப்பிடுகிறோம் என்று ஏளனம் செய்தவர்கள் இதுதான் சுகாதாரமான விஞ்ஞான முறை என்று இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
உணவு உண்ட பின் வாயைக் கொப்பளிப்பது சுகாதாரம் என்று அவர்கள் இப்போது கண்டு பிடித்து வருகிறார்கள்.
அப்போதைக்கப்போது சூடாக சமைத்து உண்ணும் பழக்கம் உள்ள நம் ஆச்சாரம் எங்கே? மாதக்கணக்கில் பிரிட்ஜில் வைத்து உணவு உண்ணும் மேற்கத்திய பழக்கங்கள் எங்கே?
பெண்கள் கால்களுக்கு மஞ்சள் பூசுவது , முகத்திற்கு மஞ்சள் பூசுவது போன்றவற்றை ஏளனம் செய்து விமர்சித்தவர்கள் ஆங்கிலேயர்கள். “எல்லோ எல்லோ மஞ்சள் ஃபெலோ…!” என்று அவர்கள் ஆட்சேபணை செய்த காரணத்தால் நம் பெண்கள் மஞ்சள் பூசுவதை நிறுத்தி புதுப்புது நோய்களை வரவேற்கும்படி ஆயிற்று என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
பண்டிகைகளுக்கு தம்மையும் வீட்டையும் சுத்தம் செய்துகொள்வது பாரதியர்களின் வழக்கம்.
அப்படிப்பட்டவர்களை சுகாதார மற்றவர்கள் என்று நிந்திப்பது அநியாயம்.
ஆயிரம் ஆண்டுகள் அடிமை வாழ்வு காரணமாக நம் இயல்பான சுபாவங்களை மறந்துவிட்டு மேல் நாட்டை காப்பியடித்து நாட்டை பிளாஸ்டிக் மயமாக்கும் எதிர்கால இந்தியர்களுக்கு சுவச் பாரத் என்ற பெயரில் அ னா ஆ வன்னாவிலிருந்து சுத்தம் பற்றி சொல்லித்தர வேண்டியுள்ளது.
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்.