ஜனவரி 23… இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்.
ஆயுதப் போராட்டத்தால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்த மற்றுமொரு வீரசிவாஜி நம் நேதாஜி.
பிரிட்டிஷாரின் கபந்தக் கரங்களிலிருந்து பாரதத் தாயை விடுவிக்க வேண்டுமென்றால் அகிம்சை வழி மட்டுமே போதாது என்றும் ஆயுதப் போராட்டமும் தேவை என்றும் உறுதியாக நம்பி முன்னெடுத்த காங்கிரஸ் தலைவர்களில் முதன்மையானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
இருமுறை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் காந்தியோடு கொள்கை வேறுபாடு காரணமாக அந்த பதவியை துறந்தார்.
ஆல் இந்திய பார்வர்டு பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக நம்பிய நேதாஜி தான் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை ஏற்படுத்தினார்.
1897 ஜனவரி 23ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக் ல் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ்.
பெற்றோர் ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி.
சிறுவயது முதல் படிப்பில் சுட்டியாக விளங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் வழியில் பயணித்து துறவியாக வேண்டும் என்று விரும்பினார்.
மனித சேவையே மாதவ சேவை என்று உணர்ந்து இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து நாட்டு விடுதலைக்காகப் போராடினார்.
ஶ்ரீஆர்யா என்ற பத்திரிகையில் ஆசிரியராக அவர் எழுதிய கட்டுரைகள் சுதந்திர போராட்ட வீரர்களிடம் உற்சாகத்தை நிரப்பின.
நேதாஜி தத்துவத்தில் பட்டம் பெற்ற பின் இங்கிலாந்து சென்றார். ஐசிஎஸ் பயிற்சி பெற்றிருந்த போதும் அதிகாரியாக பொறுப்பேற்பதை விட்டு விலகி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
பிரிட்டிஷ் இளவரசர் வேல்ஸ் இந்திய சுற்றுப்பயணத்தை எதிர்த்து சித்தரஞ்சன் தாஸோடு சேர்ந்து நடத்திய போராட்டத்தில் கைதானார். சுதந்திரப் போராட்ட காலத்தில் பதினோரு முறை சிறைக்குச் சென்றார் நேதாஜி.
இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது ஆங்கிலேயர்களை அடக்குவதற்காக கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி ரஷ்யா ஜெர்மனி ஜப்பான் நாடுகளோடு இணைந்தார். ஜப்பான் நாட்டின் உதவியோடு போர்க்கைதிகள் ரப்பர் தோட்டத் தொழிலாளிகளோடு சேர்ந்து ஆசாத் ஹிந்த் பௌஜ் கட்சியை ஏற்பாடு செய்தார். ஜப்பான் அரசு அளித்த ராணுவம் மற்றும் பொருளாதார உதவியோடு ஆஜாத் ஹிந்த் அரசாங்கத்தை சிங்கப்பூரில் ஏற்படுத்தினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக நேதாஜி நடத்திய ஆயுதப் போராட்டம் அவர்களை திக்குமுக்காடச் செய்தது.
இந்தியாவுக்கும் ஆயுதமேந்தி போராடத் தெரியும் என்று உலகிற்கு பறைசாற்றிய பெருமை நேதாஜியையே சாரும்.
இந்திய சுதந்திரத்திற்காக தன் 23 வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் அங்கத்தினராக சேர்ந்த நேதாஜி பிரிட்டிஷ் அதிகாரத்தை அடக்குவதற்காக 25 ஆண்டுகள் இடைவிடாது போராடினார்.
அகிம்சை வழி ஆங்கிலேயருக்கு புரியாத மொழி என்று உணர்ந்த போஸ் 1941 இல் வீட்டுக் காவலில் இருந்த போது பிரிட்டிஷ் ராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவி கல்கத்தாவில் இருந்து மாயமானார்.
நேதாஜி, 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்படுகிறது.