தேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்!
– – பத்மன் – –
ஹிந்து சமூகத்துக்காக சீக்கிய சமயப் பிரிவின் ஒன்பதாவது குருவான குரு தேக் பகதூர் உயிர்த் தியாகம் புரிந்த பலிதான நாள் இன்று (நவம்பர் 24). 1675ஆம் ஆண்டு இதே புனித நாளில்தான் ஔரங்கசீப்பின் ஆணவத்துக்கு அடிபணிய மறுத்து உயிர் துறந்தார் உத்தமசீலர் தேக் பகதூர்.
தேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின் ஐந்தாவது மகனாகத் தோன்றிய இவரது இயற்பெயர் தியாக் மல். பெயருக்கேற்பவே மத வெறியர்களுடன் மல்லுக்கட்டி ஹிந்து தர்மத்தைக் காப்பாற்ற தன்னுயிரைத் தியாகம் செய்தவர்.
தேக் பகதூர் என்ற பெயருக்கேற்ப ஹிந்துஸ்தானத்தைக் காக்கும் வாள் வீரனாக வலம் வந்தவர். மற்றொரு தியாகசீலரும் சீக்கியர்களின் பத்தாவது (கடைசி) குருவான குரு கோவிந்த் சிங்கின் தந்தையும் இவரே.
ஹிந்துக்களின் வீரமும் சகோதரத்துவமும் செறிந்த புதிய சமய உட்பிரிவான சீக்கியத்தின் கோட்பாடுகளை பீகார், அஸ்ஸாம், வங்காளம் ஆகிய பகுதிகளில் பரப்பியவர் குரு தேக் பகதூர். 1675ஆம் ஆண்டில் காஷ்மீரில் பண்டிட்டுகள் உள்ளிட்ட ஹிந்து சகோதரர்கள் முகலாய மன்னன் ஔரங்கசீப்பின் ஆணையால் கடுமையான ஜிஸியா வரி விதிப்பு, கோவில்கள் இடிப்பு, கட்டாய மதமாற்றத் துன்புறுத்தல் உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளானார்கள்.
அப்போது காஷ்மீர் பண்டிட்டுகளின் அழைப்பை ஏற்று ஹிந்துக்களைக் காப்பாற்றவும் அவர்களுக்குத் துணை நிற்கவும் காஷ்மீர் சென்று பாடுபட்டார் குரு தேக் பகதூர். அப்போது முகலாயப் படையினரால் கைது செய்யப்பட்டு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சமாதானப் பேச்சுக்காக ஔரங்கசீப்பால் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு அங்கு கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரும் அவரது முக்கிய சகாக்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். பின்னர் ஔரங்கசீப்பின் அரசவைக்கு அழைத்து வரப்பட்ட குரு தேக் பகதூரிடம் “நீ கடவுளுக்கு நெருக்கமானவன் என்கிறார்களே? அப்படியானால் அற்புதம் ஒன்றை நிகழ்த்திக் காட்டி விடுதலை பெறு” என ஆணையிடப்படுகிறது.
ஆனால் “கடவுளுக்கு நெருக்கமாக இருக்க அற்புதம் அவசியமில்லை, பக்தியே போதுமானது” எனக்கூறி மறுத்துவிடுகிறார் குரு. அப்படியானால் இஸ்லாத்துக்கு மதம் மாறி உயிர் பிழைக்குமாறு கட்டளையிடப்படுகிறது.
இதற்கு மாவீரர்களான குருவும் சகாக்களும் மறுத்துவிடுகின்றனர். உடனடியாக மதத்தின் பெயரால் கொடூரத்தின் உச்சகட்டம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. குருவின் சகாவான பாய் மதிதாஸ் துண்டு துண்டாக வெட்டப்படுகிறார். பாய் தயாள்தாஸ் சுடுநீர் கொப்பரைக்குள் வைத்து வேகவைக்கப்படுகிறார்.
பாய் சதிதாஸ் உயிரோடு தீவைத்து கொளுத்தப்படுகிறார். இவை அனைத்தும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட குருவின் கண் முன்னே நிகழ்த்தப்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் மதம் மாற மறுத்த குரு தேக் பகதூர் தில்லி செங்கோட்டை அருகே சாந்தினி சௌக் சந்தைப் பகுதியில், 1675 நவம்பர் 24 ஆம் தேதி, பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டி வீழ்த்தப்படுகிறார்.
அவர் பலிதானமான இடத்தில் பின்னர் குருத்வாரா ஸீஸ் கஞ்ச் சாஹிப்பும் அவரது உடலை தகனம் செய்வதற்காக தனது வீட்டையே கொளுத்திய உத்தம சீடரின் இடத்தில் குருத்வாரா ராக்கப் கஞ்ச் சாஹிப்பும் எழுப்பப்பட்டன. வரலாற்றை மறந்தால் வாழ்க்கை நம்மை மன்னிக்காது. குரு தேக் பகதூர் போன்ற குருமார்களின் மற்றும் இதர தியாகசீலர்களின் பலிதானங்களை நினைவுகூர்வோம்.
இனி இதுபோன்ற கொடுமைகள் நிகழாவண்ணம் சமூகத்தைக் காக்க உறுதி பூணுவோம். சத் ஸ்ரீ அகால். வாஹே குரு. குருமார்களின் திருவடிகளே சரணம்.