இராமகிருஷ்ண பரமஹம்சர் தன்னுடைய மூன்று சீடர்களுக்கு ஞானம் என்றால் என்ன? என்பதைப் புரியவைத்த கதையின் தொடர்ச்சி . .
மூன்று மாணவர்களும் பக்கத்துக்கு அறையில் சென்று ஆளுக்கு ஒரு கோப்பை பாலைக் குடித்தபின்பு குருவின் முன்பு வந்து அமர்ந்து கொண்டு குருவின் வாயிலிருந்து என்ன சொல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். “மாணவர்களே பக்கத்து அறைக்குப் போய் ஆளுக்கொரு கோப்பை பால் அருந்திவிட்டு வந்துள்ளீர்கள் அல்லவா?” என்றார்.
முதல் மாணவன் எழுந்து நின்று “எனக்குத் தங்கக் கோப்பையில் பால் கிடைத்தது. குடித்தேன். நான் மிகுந்த அதிர்ஷ்டக்காரன்” என்றான். இரண்டாவது மாணவனுக்கு நிறைவு இல்லை என்பது அவன் முகத்தில் தெரிந்தது. தங்கக் கோப்பையில் பால் கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே உள்ளது. வெள்ளிக்கோப்பையில் இருந்த பாலாவது கிடைத்ததே என்று மனதில் ஆறுதல் படுத்துக்கொண்டேன்.” என்றான். மூன்றாவது மாணவனின் முறைவந்தது. அவன் முகத்தில் மிகுந்த ஏமாற்றம் தெரிந்தது. “எங்கள் மூன்று பேரிலும் நான் மட்டும் அதிர்ஷ்டம் இல்லாதவன் ஆவேன். எனக்கு வெண்கலக் கோப்பையில் மட்டுமே பால் கிடைத்தது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” என்றான்.
பகவான் இராமகிருஷ்ணர் தன் மாணவர்களைச் சற்று கருணையுடன் பார்த்தார். அவர் முகத்தில் புன்முறுவல் தோன்றிது. அவர் மெல்லிய குரலில் பேசத்தொடங்கினார். “மாணவர்களே.. நான் உங்களை பக்கத்து அறைக்குச் சென்று பாலைப் பருகி வரும்படி சொன்னேன் அல்லவா?”
“ஆம் குருவே” என்றனர் மாணவர்கள்.
“அறையில் மூன்று கோப்பைகளில் ஏலக்காய், குங்குமப்பூ இட்டுக் காய்ச்சிய சுவையான பால் சம அளவில் நிரப்பி வைக்கப்பட்டிருந்ததல்லவா?
“ஆமாம் குருவே”
“ஏலக்காய், குங்குமப்பூ இட்டுக் காய்ச்சிய பாலில் எந்த வேறுபாடும் இல்லை என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?”
மாணவர்கள் அமைதி காத்தனர்.
பால் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கோப்பையின் மதிப்புப் பற்றியே நீங்கள் எண்ணிக்கொண்டு உள்ளீர்கள். இந்த எண்ணமே உங்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிப்புமிக்க கோப்பையில் பால் கிடைத்தவர்கள் மிக்க மகிழ்ச்சியாகவும், அவ்வாறு கிடைக்காதவர்கள் மிகுந்த வருத்தத்துடனும் உள்ளீர்கள். அப்படிதானே?
“ஆமாம்” என்று மாணவர்கள் சொன்னார்கள்.
பாலின் மணம் மற்றும் சுவை பற்றிய எண்ணம் உங்களுக்கு ஏன் நிறைவைத் தரவில்லை? எல்லோருக்கும் ஒரே தரத்தில் தானே பால் தரப்பட்டது. எந்த வேறுபாடும் இல்லைதானே?”
“உண்மைதான் குருவே”
“பால் என்னும் பானம் பாத்திரத்தில் இருந்தது. இந்தப் பானத்தைப் பார்க்காமல் பாத்திரத்தை மட்டும் பார்த்து உங்கள் அதிர்ஷ்டத்தை எடை போட்டுக்கொண்டேன் என்கிறீர்கள். பாத்திரத்தை மட்டும் பார்த்து மகிழ்வதுதான் அறிவு. பானத்தைப் பருகி மகிழ்வதுதான் ஞானம். ஞானிகள் பானத்தைப் பற்றியும் அது தரும் பயனைப் பற்றியும் மட்டுமே பார்க்கும் பக்குவம் கொண்டவர்கள் ஆவர். ஞானிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் மண் பாத்திரங்கள் பற்றிய எந்த வேறுபாடும் கிடையாது. ஞானிகள் தங்கக் கோப்பையையும் மண் சட்டியையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் ஆவர். பாலை ஒரு உடைந்த மண் சட்டியில் நிரப்பிக் கொடுத்தாலும் மகிழ்வுடன் குடித்துவிட்டுச் செல்வார்கள். நீங்கள் உங்களுக்குத் தரப்பட்ட பாலை அறிவின் துணைகொண்டு அணுகியுள்ளீர்கள். இதுதான் உங்கள் பிரச்சினை. இதனால் உங்கள் மனநிலையில் ஏற்றதாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. மகிழ்ச்சியும் துக்கமும் கொண்ட மனநிலையில் நீங்கள் இருப்பதற்கு இதுவே காரணம். மாறாக நீங்கள் ஞானத்தின் துணைகொண்டு அணுகியிருந்தால் நீங்கள் மூவரும் நிறைவான மகிழ்ச்சியான மனநிலையை அடைந்திருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் கேட்ட கேள்விக்கான விடை கிடைத்துவிட்டதல்லவா? பண்டத்தைப் பார்.. பாத்திரத்தைப் பார்க்காதே.. என்பது விளங்குகிறதல்லவா? எந்த விஷயத்தையுமே ஞானத்தின் துணைகொண்டு பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள். அறிவின் துணைகொண்டு பார்த்தால் ஏற்றதாழ்வுகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
பாடல் ‘உணர்வீர்’ எனத் தொடங்கி ‘கால்’ என முடிகிறது.