முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
பாடல் 17 – வெண்பா
முறையே நடப்பாய் முழுமுட நெஞ்சே,
இறையேனும் வாடா யினிமேல் – கறையுண்ட
கண்டன் மகன் வேத காரணன் சக்தி மகன்
தொண்டருக் குண்டு துணை.
பொருள் – ஆலகால விஷத்தை அருந்தியதனால் நீல நிறக் கழுத்தினை உடைய சிவபெருமானின் திருமகனும், ஓம் எனத் தொடங்கும் வேதங்களுக்கு முழு முதற் காரணமாய் உள்ளவரும், சக்தி மகனுமாகிய விநாயகரின் துணை தொண்டர்களு உண்டு என்பதை அறியாமல் அறிவின்றி நடக்கும் நெஞ்சே நமக்கு குறைவாகக் கிடைத்துவிட்டதே என வாடாமல் முறையான வழியில் நடப்பாயாக.
பாடல் ‘முறையே’ எனத் தொடங்கி ‘துணை’ என முடிகிறது.
கரையுடை கண்டன் கதை
சிவபெருமான் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். அவரின் பிணையப்பட்ட சடை, கழுத்தை சுற்றியுள்ள பாம்பு, அவரின் திரிசூலம், மூன்று கண்கள் மற்றும் அவர் கோபத்துடன் இருக்கும் சமயத்தில் அழித்தலை உண்டு பண்ணும் மூன்றாவது கண். சிவபெருமானின் மற்றொரு சிறப்பான விஷயம் அவரின் நீல நிற தொண்டை போன்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விளக்கம் உண்டு. அவரது நீல நிற தொண்டைக்கும் ஒரு காரணம் உள்ளது.
மனிதர்களின் நலனுக்காக கொடிய நஞ்சை சிவபெருமான் விழுங்கியது தான் அவரது நீல நிற கழுத்திற்குக் காரணம். இந்துக்களின் சமயத்திரு நூல்களில் சிவபெருமானைப் பற்றி ஏராளமான ஆச்சரியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை அதிசயங்களில், நஞ்சை விழுங்கியது தான் மனிதர்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக உள்ளது. நம்மை அனைத்து வழிகளிலும் சிவபெருமான் எப்படி காக்கிறார் என்பதை பற்றிய கதை மட்டுமல்ல இது; மாறாக இது ஒரு பாடமாகவும் நமக்கு விளங்குகிறது.
எப்போதுமே தீமைகளை அடக்கவோ அல்லது அதற்கு எதிர் செயலாற்றவோ வேண்டிய அவசியமில்லை என்பதே சிவபெருமானின் நீல நிற தொண்டை எடுத்துக்காட்டுகிறது. சில நேரங்களில் எதிர்மறைகளை மாற்றி அதனை செயலிழக்க செய்ய வேண்டும்.
பாற்கடலை கடைதல்
பாற்கடலுக்கு அடியில் இருக்கும் அமுதத்தை எடுக்க தேவர்களும், அரக்கர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலை கடைந்தனர். கடைந்து கொண்டிருந்த போது, கடலில் இருந்து பல பொருட்கள் வெளியே வந்தது. விலை மதிப்பில்லா கற்கள், விலங்குகள், தங்கம், வெள்ளி, லக்ஷ்மி தேவி, தன்வந்திரி போன்றவைகள் அவற்றில் சில. இவைகளை தேவர்களும் அரக்கர்களும் பங்கு போட்டுக் கொண்டனர். கடலில் இருந்து வந்த பல பொருட்களில், ஆலகாலம் என்ற கொடிய நஞ்சும் ஒன்று.
மிகவும் கொடிய நஞ்சான அதனை அருகில் கொண்டு சென்ற அனைவரும் மாண்டனர். ஏன், தேவர்களும் அசுரர்களும் கூட, நிலை குலைந்து மரண படுக்கைக்கு சென்றனர். அப்போது தான் சிவபெருமானின் உதவியை நாடி, விஷ்ணு பகவானும் பிரம்ம தேவனும் வேண்டிக் கொண்டனர்.
சிவபெருமான் இந்த நஞ்சை கட்டுப்படுத்தி செரிமானம் செய்யும் சக்தி சிவபெருமானிடம் மட்டுமே இருந்தது. சக்தி இருந்த காரணத்தினால், அந்த நஞ்சை விழுங்கும் பொறுப்பை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.
ஆலகால குடித்த சிவபெருமானின் உடலில் அது பரவ தொடங்கியது. வெகு விரைவில் அந்த நஞ்சு அவரை பாதிக்க தொடங்கி அவரின் உடலை நீல நிறத்தில் மாற செய்தது. பார்வதி தேவியின் பங்கு நஞ்சு பரவி கொண்டிருந்த அபாயம் காரணமாக மகாவித்யா வடிவில் சிவபெருமானின் தொண்டையில் இறங்கினார் பார்வதி தேவி. பின் அவர் தொண்டையோடு விஷத்தை கட்டுப்படுத்தினார். அதனால் நீல நிற தொண்டைக்கு ஆளான சிவபெருமான் நீலகண்டர் ஆனார்.
நீலகண்டன் தத்துவம்
நீலகண்டனின் முக்கியத்துவம் நீல நிற நஞ்சு நம் வாழ்க்கையில் உள்ள எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் தீமைகளை குறிக்கும். சிவபெருமானின் தொண்டையில் இருக்கும் நஞ்சு, அதனை விழுங்கவும் முடியாது – துப்பவும் முடியாது என்பதை குறிக்கும். ஆனால் காலப்போக்கில் அதனை கட்டுப்படுத்தி செயலிழக்கச் செய்யலாம்.
அதனால், நம் எதிர்மறையான சிந்தனைகளை கட்டுப்படுத்தி, நம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதையே நீலகண்டன் குறிக்கிறது. இதைத்தான் பாரதியார் நெஞ்சிற்கு எதைப் பற்றியும் கவலைப்படாமல் முறைப்படி நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தும்போது விநாயகரை நீலகண்டன் மகன் எனப் பொருத்தமாகக் கூறுகிறார்.