22. எது லட்சுமி? எது அலட்சுமி?
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“அலக்ஷ்மீ மே நஸ்யதாம்” – ருக்வேதம்.
“எனக்கு அலட்சுமி நீங்கட்டும்!”
இந்த வாக்கியம் ஸ்ரீசூக்தத்தில் உள்ளது. ஜீவன்களுக்குத் தேவையான சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் என்பது வேத மாதாவின் கோரிக்கை. அதனால்தான் ஸ்ரீசுக்தம் போன்ற மந்திரங்களின் மூலம் நமக்குத் தேவையான பல பலன்களை அடைவதற்கான ஆன்மிக சாதனைகளை அருளியுள்ளாள்.
அழகு, ஒளி, உற்சாகம், மகிழ்ச்சி, செல்வம், தர்மம், கீர்த்தி, சுத்தம், அபயம் போன்ற தெய்வீக குணங்களின் இருப்பிடமே ஸ்ரீலட்சுமியின் சொரூபம். இவற்றுக்கு மாறுபட்டது அலட்சுமி. அத்தகைய அலட்சுமி நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
நம் சம்பிரதாயங்களில் ‘லட்சுமிக்களை’ நம் உடலிலும் வீட்டிலும் நிலைபெறச் செய்வதற்குத் தேவையான பல நல்ல பழக்க வழக்கங்களை பண்டைய நூல்களில் விளக்கியுள்ளனர். பாரம்பரியமாக நம் முன்னோர் அவற்றைக் கடைப்பிடித்து வந்தனர்.
சூரியன் உதிப்பதற்கு முன் துயில் எழுவது, வீடு வாசல் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, நாமும் குளித்து சுத்தமாவது, சுத்தமான ஆடைகளை அணிவது, சமையல் பாத்திரங்கள் சுத்தமாக இருப்பது, சுத்தமாக சமைத்த உணவை கடவுளுக்கு நிவேதனம் செய்வது, காலையும் மாலையும் விளக்கேற்றுவது, கடினமான குரோதம் மிகுந்த சொற்களைப் பேசாமல் இருப்பது, இல்லத்தில் நட்பான சூழ்நிலையை நிலைநிறுத்துவது, புன்னகை மாறாமல் மகிழ்ச்சியோடு இருப்பது, மணம் நிரம்பிய மலர்கள், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை அணிவது, சாமான்களை வீணடிக்காமல் பயன்படுத்துவது… போன்றவையெல்லாம் வீட்டு வேலைகளில் முக்கியமானவை.
இவற்றை நிர்வகிப்பது சாமானிய விஷயமல்ல. இவற்றைச் சிறப்பாக தொடர்ந்து செய்யும் இல்லத்தரசிகளுக்கு பூஜிக்கத் தகுந்த இடம் அளித்துள்ளது பாரதீய கலாச்சாரம். இதற்கு கணவரும் பிள்ளைகளும் உதவ வேண்டும்.
“க்ருஹிணீ க்ருஹமுச்யதே”, “இயம் கேஹே லக்ஷ்மீ” ஆகிய சம்ஸ்கிருத சூக்தங்கள் இந்த கருத்தை தெளிவாக விளக்குகின்றன.
வீட்டுப் பணிகளில் தம் முழு நேரத்தையும் செலவிடும் பொறுப்பு சாதாரணமானதல்ல. இவ்வாறு தம் கடமையை ஆற்றும் இல்லாளிடம் லட்சுமிக்களை இயல்பாக வந்து பிரகாசிக்கிறது. அவளுடைய பிரபாவத்தால் எத்தகைய தீய சுபாவமும் கூட மாற்றமடைந்து அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
வீடு நன்றாக இருந்தால் சமுதாயம் நன்றாக இருக்கும். செல்வம் என்றால் வெறும் பணம் மட்டுமே அல்ல. தனம், தான்யம், வீரம், தைரியம், பொறுமை, திருப்தி, நல்ல பிள்ளைகள், வெற்றி, அறிவு, ஞானம் இவை அனைத்துமே லக்ஷ்மியின் சொரூபங்களே என்று வேதக் கலாச்சாரம் போதிக்கிறது. இவை விருத்தியடைந்து அலட்சுமி நீங்க வேண்டும் என்று தினமும் பிரார்த்திக்க வேண்டும்.
“அபூதிம் அசம்ருத்திம் ச சர்வான்னிர்ணுத மே க்ருஹாத்” – -“முன்னேற்றமில்லாத இலக்கு, தரித்திரம் முதலானவையெல்லாம் எங்கள் வீட்டிலிருந்து விலகட்டும்!” என்று ஸ்ரீசூக்தம் கூறுகிறது.
இங்கு வீடு என்பது ஜீவனின் வசிப்பிடமான உடலைக்கூட குறிப்பதாகக் கொள்ளவேண்டும். வீட்டிலும் உடலிலும் தரித்திரம் இடம்பெறக்கூடாது. செல்வம் திருப்தியாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமும்.
அதற்குத் தேவையான சம்பிரதாயங்களையும் நற்பழக்கங்களையும் ஏற்று நடக்க வேண்டும்.
“அசுத்தம், அனாச்சாரம், பண்பாடின்மை போன்ற நடவடிக்கைகளால் ராக்ஷஸர்களை நான் விட்டு விலகினேன். சாத்வீகம், சுத்தம், சுகாதாரம், அனைத்து உயிர்களிடமும் தயை போன்ற நற்குணங்களால் தேவதைகளிடம் விரும்பி அருளுகிறேன்” என்று மகாபாரதத்தில் மகாலட்சுமி கூறுகிறாள்.
அழகாக, திருப்தியோடு விளங்கும் வீட்டில் செல்வச் செழிப்பு தென்படாவிட்டாலும் செல்வதால் கிடைக்கும் பயன்களான ஆரோக்கியம், சுகம், அமைதி போன்றவற்றைப் பார்க்க முடியும். தேவையான பலன்கள் கிடைத்துவிட்டபின், இனி செல்வச்செழிப்பு இல்லையே என்ற கவலை தேவையற்றது. சிலர் செல்வமே லட்சுமி என்று நினைத்து அதனை சம்பாதிப்பதில் அநியாயத்தையும் அநாசாரத்தையும், பண்பாடற்ற தன்மையையும் கடைபிடிப்பார்கள். அவ்வாறு அடைந்த லட்சுமி மன சாந்தியையும் மகிழ்ச்சியையும் அருள மாட்டாள்.
தத்துவப்படி கூறவேண்டுமானால் அஞ்ஞானமே உண்மையான தரித்திரம். அதனை நீக்கிவிட்டு ஞானச் செழிப்பை பெறுவதே மகாலஷ்மி உபாசனையில் உள்ள முக்கியமான தாத்பரியம்.