26. நாட்டு நலனே மக்கள் நலம்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.
தமிழில்: ராஜி ரகுநாதன்
“பூமே மாதர்னிதேஹிமா பத்ரயா சுப்ரதிஷ்டிதம்”
-அதர்வண வேதம்.
“இந்த தேசத்தில் நாம் நிலையாக நலமாக வாழவேண்டும்!”.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஒரு அழகான சமுதாயம், ஒரு பரிபூரணமான தேசம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வர்ணித்துள்ளார்கள் என்றால் அன்றைய நாகரீகம் நம் தேசத்தில் எத்தனை முன்னேறி இருந்தது என்பதை அறியலாம்.
அந்நாளைய சூத்திரங்களை இந்நாளிலும் நாம் சோதித்துப் பார்த்தால் உயர்ந்த சமுதாயத்தையும் சிறந்த குடிமக்களையும் உருவாக்க முடியும்.
நாட்டு நலனை விரும்புபவரே பிரதானமான தலைவராக வேண்டும். அரசாளுபவர் தன் நலனை விட தேச நலனைக் கோருபவராக இருக்க வேண்டும். அவர்களே எப்போதும் எச்சரிக்கையோடு நாட்டைப் பாதுகாப்பர். ஆயின் குடியரசு என்னும்போது, மக்களே அரசாளுபவர் ஆதலால் அவர்களும் தம் நாட்டு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாட்டின் நலன் தொடர்பான எந்த கருத்தையும் மறுக்காமல் ஏற்க வேண்டும்.
நாட்டின் ஒற்றுமையையும் நலனையும் பாதிக்கும் எத்தகைய அம்சமானாலும் விலக்கிவிட வேண்டும். இது பொது மக்களின் கடமை. மக்கள் அனைவரும் பூமியைத் தாயாக வணங்க வேண்டும். தேசம் அனைத்து விதத்திலும் மேன்மை அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும். மேலும் நாட்டு மக்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூட ருக் வேதத்தில் வேதமாதா தெரிவிக்கிறாள்.
“சம் கச்சத்வம், சம் வதத்வம், சஞ்ஜானனாம், விஜானதாம்…” இவை பகவானைப் பிரார்த்திக்கும் சொற்கள்.
“நாங்கள் அனைவரும் சேர்ந்து பயணிப்பது போல், ஒன்றிணைந்து பேசுவதுபோல், சேர்ந்தே மனம் ஒன்றி வாழ்வது போல் ஆசீர்வதியுங்கள்!” என்று பகவானிடம் செய்யும் பிரார்த்தனை இது.
ஒரு நல் விருப்பத்தை இதில் வெளியிடுகிறார்கள். இது மக்கள் அனைவரின் விருப்பமாக வேண்டும். அனைவரும் சேர்ந்து பயணிப்பது என்றால் ஒரே லட்சியத்தை நோக்கி அனைவரும் ஒருமனதாக வேண்டும் என்பது பொருள். அதேபோல் எண்ணம், சொல், செயல் மூன்றும் சமமாக வேண்டும்.
தற்காலத்தில் சமரச சமுதாயம் என்கிறோம். இந்த கருத்து வேதத்தில் எவ்விதம் எடுத்தியம்பப்பட்டுள்ளது என்பதை பரிசீலிக்க வேண்டும்.
அது மட்டுமின்றி, “பாகம் வ்யசாபூர்ணே சம்ஜானாதா” என்றார்கள். “பாகத்தைக் கூட சமமாக பகிர்ந்து கொள்வோமாக!” இதையும் அறிய வேண்டும். ஏனென்றால் செல்வம் சிலர் கைகளிலேயே மையம் கொண்டிராமல் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும். ஆனால் அவரவர் தகுதியை அனுசரித்து, அவரவர் உழைப்பைப் பொறுத்து, அவரவர் அறிவுக்கூர்மையை பொருத்து செல்வம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
நாட்டு மக்கள் எந்த குறையுமின்றி வாழ வேண்டுமானால் அனைவரின் நோக்கமும் நாட்டு நலனை முன்னிட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்தியேகமான செல்வங்களும் வளங்களும் இருக்கும். அவற்றை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். செழிப்பாக்கி கொள்ள வேண்டும். பாதுகாக்க வேண்டும்.