தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“ப்ரஹ்மை விஸ்மிதம் வரிஷ்டம்” – முண்டகோபநிஷத்.
“விஸ்வமனைத்தும் சிறப்பான பிரம்மமே!”
விஸ்வமனைத்தையும் பிரம்ம தத்துவமாக தரிசித்த பாரதிய வேதாந்த சாஸ்திரம் ஒரு உயர்ந்த உபதேசத்தை பிரபஞ்சத்திற்கு போதிக்கிறது.
அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் முதல் நாமம் விஸ்வம். விஸ்வமே விஷ்ணு ஸ்வரூபம் என்று குறிப்பிடுகிறது.
இந்த உண்மையை அனுபவத்தில் அடைவதே ஞானம். இத்தகு ஞானமடைந்தவரே மகா பக்தர். அவரே முக்தர். அனைத்தையும் பரப்பிரம்மமாக தரிசிப்பதே ஏகத்துவ ஞானம்.
“கிம் ஏகம் தைவதம் லோகே“என்று தர்மபுத்திரன் பீஷ்மரை வினவியதற்கு, “ஏக தைவதம் பரப்பிரம்மமே” என்பது பீஷ்மரின் பதில்.
“சர்வம் கல்விதம் ப்ரஹ்ம – தஞ்ஜலானிதி சாந்த உபாசீத” என்று சாந்தோக்யோபனிஷத் வாக்கியம் கூட இதே சத்தியத்தை விளக்குகிறது.
அலைகள் எல்லாம் ஒரே கடல் நீரின் சொரூபமே. அதேபோல் விஸ்வத்தில் தென்படும் அனைத்தும் பரப்பிரம்ம சொரூபமே. பரமாத்மாவிடம் ஜனித்து பரமாத்மாவிடம் லயமாகிறது ஜகத்.
எல்லாம் பரமாத்மாவின் சொரூபம் என்பதால் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் எங்கே? கொடுமைகளுக்கும் கவலைகளுக்கும் வாய்ப்பு எங்கே?
“அஹமாத்மா குடாகேச! சர்வபூத ஸயஸ்தித:” -“அனைவரின் இதயத்திலும் உள்ள ஆத்மா நான்” என்ற பரமாத்மாவின் கீதைச் சொற்கள், “சர்வத்ர சமதர்சனம்” என்று சமத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
பிறவியெடுத்த உடல்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் சைதன்ய சொரூபமான ஆத்மாவில் பேதமில்லை. இதனை அறிந்தவர் “ஆத்மவத் சர்வபூதானி” – தன்னைப் போலவே அனைத்து உயிர்களையும் பார்க்க இயலும்.
“ந ச சர்வஸ்யைகாத்மத்வே ராகாதயஸ்ஸம்பவந்தி… தஸ்மாச்சாந்தஉபாசீத… இதிஸ்ருதே:”என்று விஷ்ணு நாம பாஷ்யத்தில் ஆதிசங்கரர் கூறுகிறார்.
எல்லாம் தானே ஆகிய ஏகமான பரப்பிரமத்தை அறிந்தபின் விருப்பு வெறுப்புகள் ஏற்படாது. “தஸ்மாச்சாந்த உபாசீத” – ‘நானாக அமைதி அடைந்தவனாக உபாசிக்க வேண்டும்’ என்று வேதம் கூறுகிறது.
இதனைக் கொண்டு வேதாந்த ஞானம் அளிக்கும் அமைதியை புரிந்து கொள்ள முடியும். உலகளாவிய வேதாந்தம் ஏக தத்துவத்தை விளக்குகிறது.
“இதுவே பிரபஞ்சத்தின் எதிர்கால மதம்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றில் உள்ள ஆழம் இந்த ஆப்த வாக்கியத்தின் இதயமாக உள்ளது.
எல்லாம் பிரம்ம மயம் என்பதை அனுபவத்தில் பெறும் வரை இந்த கருத்தை பாவனையில் சிந்தித்து வரவேண்டும். அந்த சிந்தனை சகல உயிர்களிடத்தும் அமைதியையும் நன்மையையும் ஏற்படுத்தும்.