பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 12, கண்ணன் – என் சேவகன் – விளக்கம்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அன்று முதல் அவனுக்கு எங்கள் மேல் அன்பு அதிகமாகிக்கொண்டே வரத்தொடங்கியது. அவனால் நாங்கள் அடையும் நன்மைகளைப் பட்டியலிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு அதிகம். கண்களை இமைகள் எப்படிக் காக்கின்றதோ அப்படி அவன் எனது குடும்பத்தைக் காக்கின்றான்.
ஒரு தடவையாவது வேலையில் சலிப்படைந்து முணுமுணுப்பதைக் காணவில்லை. வீடு வாசல் பெருக்குகிறான், வீட்டை நன்கு துடைத்து சுத்தம் செய்கின்றான், வேலைக்காரிகள் செய்கின்ற குற்றங்களையெல்லாம் கண்டித்து அடக்குகின்றான். அதுமட்டுமா? குழந்தைகளுக்கு அவன் ஆசிரியராக விளங்குகிறான்.
வளர்ப்புத்தாய் போல் அவர்களுக்கு அனைத்துப் பணிகளையும் தயங்காமல் செய்கின்றான். வைத்தியரைப் போல ஏதாவது உடல்நலக் குறைவு என்றால் அதற்கேற்ற மருந்து கொடுத்து மருத்துவனாகவும் இருக்கின்றான். எல்லோருடனும் சகஜமாக நடந்து கொள்கிறான்.
ஒரு வேலையிலும் குறை வைக்காமல் வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் வாங்கி தயாராக வைத்து விடுகிறான். பால், மோர் இவற்றை வாங்கி வைக்கிறான். வீட்டுப் பெண்களுக்கு தாயைப் போல பிரியமோடு பரிந்து ஆதரித்து நடந்து கொள்கிறான்.
ஒரு நல்ல நண்பனைப் போலவும், ஒரு மதியூகி அமைச்சன் போலவும், நல்ல ஆசிரியர் போலவும், தெய்வப் பண்புகளோடும், பார்ப்பதற்கு மட்டும் ஒரு வேலைக்காரனாகவும் நடந்து கொள்ளும் இவன் எங்கிருந்தோ வந்து சேர்ந்தானே. இடைச்சாதி என்றல்லவா சொன்னான். இங்கு இப்பேற்பட்ட தூயவனை நான் வேலைக்காரனாகப் பெற என்ன தவம் செய்து விட்டேன்.
கண்ணன் என் அகத்தில் கால் வைத்த நாள் முதலாக எண்ணம், விசாரம் (கவலை) எதுவும் அவன் பொறுப்பு என்று விட்டுவிட்டேன். அவன் காலடி எடுத்து என் இல்லத்தில் வைத்த நாள் முதலாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், எப்போதும் சிறந்து விளங்கும் நலன்கள் அனைத்தும் ஓங்கி வளர்கின்றன. கண்ணனை நான் ஆட்கொண்டேன்!
கண்ணனைக் கொண்டதால் கண் கொண்டேன். கண் கொண்டேன். கண்ணன் என்னை வந்தடைந்து ஆட்கொள்ள காரணமும் இருக்கின்றனவே. தொடக்கத்தில் வீட்டில் இருக்கும் வேலைக்காரர்களால் ஏற்படும் தொல்லைகளை பாரதியார் அழுகுறச் சொல்லுகிறார். பின்னர் கண்ணன் வேலையாளாக வந்த பின்னர் ஏற்பட்ட நன்மைகளைச் சொல்லுகிறார்.
இறுதியில் இறைவனே எல்லாவற்றிற்கும் பொருப்பு என நம்பி அவனை நம்பிவிட்டால் மன நிம்மதி கிடைக்கும் என முடிக்கிறார். இனி அடுத்த பாடலான கண்ணன் பாட்டின் ஐந்தாம் பாடலான கண்ணன் – என் அரசன் பாடலைக் காண்போம்.
பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். … 1
கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்
இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே . … 2
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;
‘இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்’
என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான். … 3
கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட,
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். … 4
வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். … 5
காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? … 6
நாம வன்வலி நம்பியி ருக்கவும்,
நாண மின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான். … 7
மீதமுள்ள பாடலை நாளை காண்போம்.