― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்1975 அந்த அக்.02ம் தேதி... மறக்க இயலாத நினைவுகள்!

1975 அந்த அக்.02ம் தேதி… மறக்க இயலாத நினைவுகள்!

kamarajar

~ கே.எஸ். இராதாகிருஷ்ணன் ~

கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று.
இராஜாஜி அரங்கத்தில் இப் படத்தில் திருநெடுமாறனின் பின்னல்இருக்க வாய்ப்புகிட்டியது.

அப்போது கல்லூரி காலம் . என்னை கோவில்பட்டி எனபெருந் தலைவர் அன்போடு அழைப்பார். எனது தந்தையார் கே.வி.
சீனிவாசன் 1940 களிலிருந்து அவருக்கு நெருக்கமானவர்.

1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காலை 06:30 மணிக்கு காமராஜர் எழுந்தார். காலை தினசரிகள் அனைத்தும் அவரிடம் கொடுக்கப்பட்டன. எல்லாப் பத்திரிக்கைகளையும் படித்தார். பின்னர் குளித்து விட்டு வந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.

10 மணிக்கு காமராஜரை தினந்தோறும கவனிக்கும் டாக்டர் வந்து உடல் நிலையைப் பார்த்து இன்சுலின் ஊசி போட்டு விட்டு சென்றார். 11 மணியளவில் எங்களை போன்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் காமராஜர் வீட்டிற்கு சென்று, அவரைப் பார்க்க விரும்புவதாக உடல்நலமின்றி இருந்த காமராஜரின் அறைக்குள் அவர்கள் அனைவரும் நுழைந்த போது; இந்த சிறிய அறைக்குள் இத்தனைப்பேருக்கும் இடமில்லையே என்று காமராஜர் கூறியபடியே அறைக்குள் நுழைந்தார். அவரை கைத்தாங்கலாக வெங்கட்ராமன் அழைத்து வந்தார்.

அவரைப் பார்த்ததும் மாணவர்கள் காந்தி வாழ்க, காமராஜர் வாழ்க என்று கோஷமிட்டனர். மூன்று நிமிடம் உரையாடிய காமராஜர் நிற்க முடியாமல் அவர்களிடம் விடைப்பெற்றார் . நெடுமாறன், குமரிஅனந்தன், தின்டிவனம் இராமமூர்த்தி என தமிழ் நாடு காங்கிரஸ் செயலாளர்களை 12 மணிக்கு வந்து சந்திக்கும்படி அழைத்தார்.

அப்போது பா.ராமசந்திரன் தலைவர்வழக்கமாக 1 மணிக்கு உணவருந்தும் காமராஜர் அன்று 01.30 மணிக்கு சாப்பிட்டார். பாவக்காய் கறி, முளைக்கீரை மசியல், பருப்பு துவையல், மோர் சாதம் ஆகியவற்றை காமராஜரின் உதவியாளர் வைரவன் பறிமாறினார். உணவு அருந்தும் போது மின்விசிறி ஓடியபோதும் வியர்ப்பதாக கூறினார். வைரவன் அதெல்லாம் ஒன்றுமில்லை, பிரமை என்று கூறி காமராஜருடைய உடம்பை துடைத்து விட்டார்.

சாப்பிட்ட பிறகு பாத்ரூம் சென்று விட்டு தன்னுடைய படுக்கை அறைக்கு சென்றார். அவர் மணியடித்தால் தான் உதவியாளர் உள்ளே நுழைவது வழக்கம். இரண்டு மணிக்கு காமராஜர் மணியடித்தார். வைரவன் உள்ளே சென்று பார்த்தால் காமராஜருக்கு உடம்பெல்லாம் வியர்வையாக இருந்தது.

ஆனால் அந்த ரூம் A/C செய்யப்பட்டிருந்த ரூம். பயந்து போன வைரவன் காமராஜரின் தலையை தொட்டுப் பார்த்தார். ஜில்லென்று இருந்தது. உடனே அவர் டாக்டரை கூப்பிடட்டுமா என்று காமராஜரிடம் கேட்டார். டாக்டர் செளரிராஜனுக்கு போன் செய்து தரும்படி காமராஜர் கேட்டார்

உடனே பல இடங்களில் தேடிப்பார்த்து அவர் எங்கிருக்கறார் என்று தெரியாததால் மற்றொரு டாக்டரான ஜெயராமனை போனில் பிடித்த வைரவன் காமராஜரை டாக்டரிடம் பேச வைத்தார். காமராஜர் டாக்டரிடம் A/C ஒடிக்கொண்டிருக்கிறது, ஆனால் வேர்க்கிறதே என்று கேட்டார். டாக்டர் மூச்சு திணறுகிறதா, மார்பில் வலியிருக்கிறதா என்று காமராஜரிடம் கேட்டு விட்டு உடனே புறப்பட்டு வருவதாக கூறினார்.

டாக்டரிடம் பேசி முடித்த பிறகு வைரவனை அழைத்த காமராஜர் வரும்போது ரத்த அழுத்தம் பார்க்கிற கருவியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லு, டாக்டர் வந்தவுடன் எழுப்பு, விளக்கை அணைத்து விட்டு போ என்று கூறினார். உதவியாளரும் விளக்கை அணைத்து விட்டு சென்றார். மூன்று மணியளவில் முதலில் காமராஜர் அவர்கள் தேடிய டாக்டர் செளரிராஜன் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்குள் ஓடிவந்து அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே போனார்.

கட்டிலின் இடதுபுறம் திரும்பிக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு கால்களை மடக்கியவாறு காமராஜர் அவர்கள் படுத்திருந்தார். ஆனால் காமராஜரிடம் இருந்து வழக்கமாக வரும் குறட்டை ஒலி வராததை கண்ட டாக்டர் பயந்து போய் காமராஜரை தோளைத் தொட்டு எழுப்பினார். பதில் எதுவும் இல்லை. நாடித்துடிப்பை பார்க்கலாம் என்று கையைத் தொட்டார். ஜில்லென்று இருந்தது.

கையில் இருந்த ரத்த அழுத்தக் கருவியையும், ஸ்டெதஸ்கோப்பையும் தரையில் அடித்து, அழுது புரண்டார். அதற்குள் வந்த டாக்டர் ஜெயராமன் நிலைமையைப் பார்த்து நேரிடையாக இதயத்திற்குள் ஊசி மருந்தை செலுத்த முயன்றார். பயனில்லை. அடுத்ததாக டாக்டர் அண்ணாமலையும் அங்கு வந்தார். அவரும் முயற்சித்துப் பார்த்து விட்டு வெளியில் வந்து அதிகாரப்பூர்வமாக காமராஜர் இறந்து விட்டதை அறிவித்தார். அப்போது மணி 03.20.

காந்தியடிகள் பிறந்த நாள் அக்டோபர் 2. அதுவே காமராஜர் பிரிந்த நாளாகவுமாகியது. அன்று விடாத மழையிலும் கூட காமராஜர் மறைவுச் செய்தி காட்டுத்தீயாக நாடு முழுக்கப் புயல் வேகத்தில் பரவியது.

உதடுகளிலே ஒரு மவுனப் புன்னகை, எளியத்தோற்றத்தில் பெருந்தலைவன் புகழோடு ஐக்கியமாகி விட்டான். தமிழகம் எங்குநோக்கினும் கதறியழும் மனிதர்கள். ராஜாஜி மண்டபத்துக்கு அவர் உடலைக் கொன்டு செல்ல முடிவானது. அன்று மாலை 05.30 மணிக்கு விசேஷ மோட்டார் வண்டியில் காமராஜ் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது

காமராஜ் மறைவுக்கு மரியாதை செலுத்தும்வகையில் காந்தி ஜெயந்தி விழாக்கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்றும், தமிழ்நாடு அரசு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version