பாதுகாக்கப்பட வேண்டிய மதுரை ஆதீனம
இன்றைக்கு மதுரை ஆதீனம் என்ற பெயரே நகைச்சுவையாக மாறியுள்ளமைக்கு இன்றைய 292 ஆவது சந்நிதானமான அருணகிரிநாத சுவாமிகளின் செயற்பாடுகளே காரணமாகியிருக்கிறது.
அதிரடியாக அரசியல், சினிமா பேசுவதும் திருக்குரான் ஓதுவதும், நித்தியானந்தாவை இளையசந்நிதானமாக நியமித்து பின் நீக்கியதும், இப்போது இந்துமதம் என்ற ஒன்றில்லை என்பதும் என்று இவரது நகைப்பிற்குரிய செய்கைகளே இதற்கு காரணம்
ஆனால், இந்த ஆதீன சிறப்பும்- வரலாறும்- பாரம்பரியமும் எப்போதும் கவனத்திற்குரியன. அவ்வகையில் இந்த ஆதீனத்தை பாதுகாக்க வேண்டிய தேவை சைவசமயிகளுக்குரியது.
1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தப்பெருமான் மதுரைக்கு எழுந்தருளிய போதிருந்த மடமே அவரது பாரம்பரியமாக இன்றும் மதுரையாதீனமாக திகழ்கிறது.
இந்த ஆதீனத்தில் இன்று வரை 291 குருமகாசந்நிதானங்கள் அருளாட்சி செய்துள்ளனர்.
இந்த ஆதீன 233ஆவது சந்நிதானமான ஸ்ரீலஸ்ரீ சம்பந்த சரணாலய சுவாமிகள் துறையூர் அரசனின் தொழுநோயை வீபூதியிட்டு நீக்கியவர்.
1865ஆம் ஆண்டு வரை மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆகியனவும் இந்த ஆதீன கட்டுப்பாட்டிலேயே சிறப்புற்றிருந்துள்ளன.
இராமநாதபுரம் பாஸ்கரசேதுபதி மகாராஜாவின் ( 1873- 1903) குருவாக இந்த ஆதீனசந்நிதானங்களே திகழ்ந்துள்ளனர்.
மருதபாண்டியச் சகோதரர் இந்த ஆதீன திருஞானசம்பந்தர் எழுந்தருள வெள்ளித்தேர் சமர்ப்பித்துள்ளனர்.
நல்லைநகர் ஆறுமுகநாவலரை பாராட்டி அப்போதைய சந்நிதானம் அவர்கள் தாமணிந்திருந்த ஆறுகட்டி சுந்தரவேடங்களை அணிவித்ததாக சொல்லப்படுகிறது.
அண்மையில் 291ஆவது பட்டம் சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்ததேசிக பரமாச்சார்யர் பூர்வாஸ்ரமத்தில் இலங்கை- கொழும்பில் வாழ்ந்தவர்.
இவர் 1955ல் உருவாக்கிய “ஹிந்து தர்ம பிரசார சங்கம்” செய்த பணிகள் பற்பல.. சைவ வைணவ பெரியவர்களை ஒன்றிணைத்து இந்து ஒற்றுமையை நிலைநாட்ட இவர்கள் பெருமுயற்சி செய்தார்கள்.
ஜோதிஷம், ஆவி உலகம் முதலிய ஆய்வுகளில் அழுந்தியிருந்தாலும் இந்து தர்ம வளர்ச்சிக்கு இவர்கள் இயன்ற பணி செய்தார்.
யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை ஸ்ரீ ஸ்ரீ சிவசுப்ரம்மண்யசர்மா ( மணி பாகவதர்) அவர்களுக்கு கஷாய வஸ்த்ரம் அளித்தவர் இவரே.
அத்தோடு தம் குருவான ‘ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்யர்’ என்ற நாமத்தை சூட்டி மணிபாகவதரை நல்லூரில் சைவாதீனம் ஸ்தாபிக்கச்செய்தவர் இவரே.
ஆக, யாழ்ப்பாணத்தில் சைவ ஆதீனமான திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் தாய் ஆதீனம் மதுரையாதீனமே ஆகும்.
சமய குரவருள் ஞானசம்பந்தர் பேரிலேயே பழமையான ஆதீனம் உள்ளது.
ஆக, இத்தகு பாரம்பரியமான ஆதீனத்தை இன்றைக்கு உள்ள சீர்கேடுகளிலிருந்து விடுவித்து காக்க வேண்டும்.
தமிழ் ஞானசம்பந்தர்- கௌணியர் கோன்- வள்ளல் பிரானின் திருவடிகளை வாழ்த்துவோம்.
நீர்வை தி.மயூரகிரி
(படத்தில் நல்லையாதீனத்தை உருவாக்கிய மதுரை ஆதீன 291ஆவது குருமகா சந்நிதானம்)
#மதுரை #நல்லை #குருமகாசந்நிதானம் #திருஞானசம்பந்தர்