நான் பத்திரிகையாளனாகப் பணியாற்றியபோது புதிய அரசியல் கட்சிகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பார்த்திருக்கிறேன்.
எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றையும் கண்டிருக்கிறேன்.
அந்தக் காலத்தில் தானாகத் தோன்றிய சுயம்புகளில் ஒன்று – பாட்டாளி மக்கள் கட்சி.
1989ல் சென்னை சீரணி அரங்கில் நடந்த அதன் துவக்க விழாவில் நான் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசி இருக்கிறேன்.
வைகோ துவக்கிய மதிமுக. திமுகவிலிருந்து தோன்றியது. தாய்க்கட்சியில் வாய்ப்புக் கிடைக்காதவர்கள், ஏதோ காரணத்தால் அதிருப்தி அடைந்தவ்ர்கள் ஆரம்பத்தில் அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்கள்.
இப்போது வைகோவே திமுக கூட்டணியில் இருப்பதாகத் தோன்றுகிறது. எனவே மதிமுகவை நான் சுயம்புவாகக் கொள்ளவில்லை.
வி.சி.க., புதிய தமிழகம் போன்றவற்றை நான் பகுத்தாய்வு செய்யவில்லை. நாம் தமிழர் கட்சி துவங்கப்படும்போது நான் செய்திப்பணியில் இல்லை.
பாட்டாளி மக்கள் கட்சி தோன்றுவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே – வன்னிய மக்கள் செறிந்து வாழும் வட தமிழகத்தில் மருத்துவர் ராமதாஸ் கிராமம் கிராமமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கல்வியிலும் வளர்ச்சிக் குறியீடுகளிலும் மிகவும் பின் தங்கி இருந்த உழைக்கும் ஏழை மக்கள். 80களில் விரல் விட்டு எண்ணத் தக்க அளவிற்கே சமுதாய முன்னேற்றம் இருந்தது.
எனவே மருத்துவர் ராமதாஸ் முன்வைத்த “இருபது சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை” வன்னியர்களுக்கு உவப்பாக இருந்தது.
87க்கு முன்பு அவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது. ஒரு இயக்கம் வெற்றி பெறத் தேவையான “உயிர் உரம்” போட்டிருந்தார்கள், பலர்.
எனவே பாட்டாளி மக்கள் கட்சித் துவக்க விழா மிகவும் எழுச்சியுடன் நடந்தது.
அப்போதெல்லாம் சீரணி அரங்கம் சென்னை மெரீனாக் கடற்கரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடந்த ஏதுவான இடம்.
அழகைக் காரணம் காட்டி (சிலர் வாஸ்து என்றும் சொல்கிறார்கள்) இரவோடு இரவாக அது பின்னர் (2003 ஆகஸ்ட் 9) இடிக்கப்பட்ட விதம் என் போன்றோருக்கு மிகுத்த மன வேதனை தந்தது.
கடற்கரை மணலில் அப்படி ஒரு கட்டிடம் இருந்ததே இன்றைய தலைமுறையினர் பலருக்குத் தெரிந்திருக்காது.
சீரணி அரங்கம் அண்ணா ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் திலகர் திடல் என்று அதற்குப் பெயர்.
அண்ணா ஆட்சிக்கு வந்ததும் தன்னார்வத் தொண்டர்கள் அமைப்புகளை நிறுவி அதற்கு சீரணி என்று பெயரிட்டார்.
அவர்கள் தங்கள் பகுதிகளுக்குத் தேவையான சமுதாய நலப் பணிகளை அரசின் உதவியோடு செய்வதே திட்டம்.
காங்கிரஸ் இயக்கத்தை 67ல் வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்ததன் நினைவாக சீரணித் தொண்டர்கள் எழுப்பிய மேடையே சீரணி அரங்கம்.
அரசியல் பொதுக் கூட்டங்கள், விழாக்கள், மத நிகழ்ச்சிகள் என்று அங்கு தொடர்ந்து நடந்துவந்தன.
கடந்த சுமார் 30 ஆண்டு காலத்தில் நடந்தேறிய அரசியல் அதிரடிகளுக்கு சீரணி மேடைதான் மௌன சாட்சி.
வாடகை மிகவும் சொற்பம். கொஞ்சம் விளக்கு வசதி செய்து விட்டால் போதும். கடற்கையில் காற்று வாங்கிக்கொண்டே பொதுக் கூட்டங்களை நடத்தி விடலாம்.
முன்னர் நடந்த 1988 சட்டமன்றத் தேர்தலை பா.ம.க.வின் தாய் அமைப்பான வன்னியர் சங்கம் புறக்கணித்திருந்தது.
டாக்டர் ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்க முன்னோடிகள் பலரோடு எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது. மருத்துவர் தராசு பத்திரிகையில் “எங்கள் போராட்டம் எதற்காக?” என்ற பெயரில் ஒரு தொடர் எழுதி வந்தார்.
“தேர்தல் புறக்கணிப்பு” என்ற தங்கள் முடிவிலிருந்து மாறிப் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவரும் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். எனக்கு ஆத்மார்த்தமான நண்பர்.
அப்போது ஆளும்கட்சி திமுக. ஜெயலலிதா எதிக்கட்சித் தலைவர். அதிமுக – காங்கிரஸ் கூட்டணி மலர்ந்துகொண்டிருந்த நேரம்.
வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த பா.ம.க.வோடு தேர்தல் உறவு கொள்ள டெல்லிக்கு ஆலோசனை கூற விரும்பினார் வாழப்பாடி. அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராயுமாறு என்னிடம் கூறினார்.
நான் திண்டிவனம் சென்று டாக்டரின் மனநிலையை அறிந்துகொள்ள முயற்சித்தேன். நேரடியாகக் கேட்டால் நட்பு பாதிக்குமோ என்ற அச்சத்தால் சுற்றி வளைத்துப் பேச்சைத் துவக்கினேன்.
“டாக்டர். அரும்பாடுபட்டு கட்சி துவக்கி நன்கு வளர்ந்துள்ளீர்கள். இந்த நிலையில் காங்கிரஸ் – அதிமுக கூட்டணியில் இணைவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“என்னங்க, ஷ்யாம் இப்படிச் சொல்றீங்க? வட தமிழ்நாட்டில் பத்து எம்.பி. தொகுதிக்கு மேல் நாங்க ஜெயிப்போம். பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும் (அப்போது அங்கு சட்டமன்றத் தேர்தல்) அளவுக்கு பா.ம.க.வுக்கு வெற்றி கிடைக்கும். இந்த நிலையில் கூட்டணி எதற்கு?”
நான் மௌனமானேன். டாக்டர் ராமதாசின் தன்னம்பிக்கை பெரிய தலைவர்களுக்கு இயல்பானது தான்.
ஆனால் யதார்த்தத்தில் தேர்தல் முடிவுகள் அப்படி அமைவதில்லை. இதுவே தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.
நான் எதிர்பார்த்தபடியே பாட்டாளி மக்கள் கட்சி வட தமிழகத்தில் நல்ல ஓட்டு சவீதம் பெற்றது
முதலில் ஓடி வருபவருக்கு வெற்றி (FIRST PAST POST) என்ற நமது பிரிட்டிஷ் பாராளுமன்ற தேர்தல் நடைமுறையில் வென்றவர்களுக்கு சீட்டும் தோற்றவர்களுக்குச் சதவீதமும் தான் கிடைக்கும்.
அது போலவே பா.ம.க. குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி பெற்றது.ஆனால் சீட் எதுவும் பெறவில்லை.
பின்னர் பா.ம.க. 91 சட்டமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு ஒரு சீட் வென்றது.
இன்றைய அதிமுக சீனியர் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அதன் முதல் எம்.எல்.ஏ. அவரை யானை மீது அமரச் செய்து தலைமைச் செயலகம் அழைத்து வந்தனர்.
அதன் பின் ஜெ. எதிர்ப்பு அலை வீசிய 96 தேர்தலில் அக் கட்சி வாழப்பாடி ராமமூர்த்தியின் போட்டி காங்கிரஸ் (திவாரி காங்கிரஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்து நான்கு எம்.எல்.ஏ. சீட்டுகளைக் கைப்பற்றியது.
நால்வரில் ஒருவர் என் இனிய நண்பர் பேராசிரியர் தீரன். பின்னர் தி.மு.க., அதிமுக என்று பல கூட்டணிகள். இப்போது மீண்டும் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு வருகிறது..
பழைய வரலாற்றை நான் ஏன் நினைவுபடுத்துகிறேன் என்றால் தமிழக அரசியல் அரங்கில் இப்போது உருவாகிவரும் புதிய அரசியல் கட்சிகள் மற்றும் அவை உருவாக்கும் புதிய தேர்தல் கணக்குகள்.
கமல் கட்சியான “மக்கள் நீதி மய்யம் ” மதுரையில் புது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் துவக்கப்பட்டுவிட்டது.
இன்னொன்றான ரஜினிகாந்த்தின் கட்சி விரைவில் மலர உள்ளது. சுயம்புவாக உருவாகும் – பெரிய அளவு ஊடக வெளிச்சம் பெற்று வரும் அமைப்புகள் இவை..
கட்சி துவங்குவதற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் மேற்கொண்ட பயணங்கள் எண்ணிடலடங்கா. துவக்கத்திலேயே “தினப்புரட்சி” என்ற பத்திரிகையும் அவர் நடத்தினார். அந்த டைட்டில் கூட என்னிடம் இருந்ததே.
ஆனால் கமல் ஹாசன் “தொபுக்கடீர்” என்று குதித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் அவர் நடத்திய துவக்கவிழாவில் நல்ல கூட்டம் இருந்தது.
ஆனால் அது தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அவரது ஆதரவாளர்கள். எனவே அதை வைத்து நாம் கணக்குப் போட முடியாது.
“கட்டமைப்பை வலுப்படுத்திய பின்னரே கட்சி” என்று அறிவித்து விட்டார், ரஜினிகாந்த்.
எனவே இப்போதைக்கு பிரம்மாண்ட பொதுக் கூட்டம் எதையும் அவர் நடத்தப் போவதில்லை என்று ஊகிக்கலாம்.
பா.ம.க.வுக்கு “ஜாதிக்கட்சி” என்ற முத்திரை இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதற்குக் கணிசமான ஆதரவு இருந்தது.
அப்படி ஒரு ஆதரவு அலை கமல், ரஜினி ஆகிய இருவருக்கும் இருப்பதைத் தெரிந்துகொள்ள அடுத்த தேர்தல் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
உங்களுக்கு ஏதேனும் கணிப்பு இருந்தால் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
கட்டுரை: பத்திரிகையாளர் ஷ்யாம்