தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
மலின தர்ப்பண ந்யாய: – மலினம் – தூசி படிந்த, தர்பணம் – கண்ணாடி
‘கண்ணாடி பொய் சொல்லாது’ என்ற பழமொழி உண்மையானது. கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் பற்றித் தெரிவிக்கும் கூற்று இது. கண்ணாடி நம் அழகை அதிகமாக்கிக் காட்டாது. குறைத்தும் காட்டாது. உள்ளது உள்ளபடி காட்டக் கூடியது கண்ணாடி.
ஆயின், கண்ணாடியின் மேல் தூசி, அழுக்கு படிந்திருந்தால் பிரதிபிம்பம் சரியாகத் தெரியாது. இதுவே மலின தர்ப்பண ந்யாயத்தின் உட்பொருள். கண்ணாடியைத் துடைத்து சுத்தம் செய்தால் பிரதிபிம்பம் சரியாகத் தென்படும். தவறு யாருடையது? கண்ணாடியுடையது அல்ல. தூசியுடையது. அழுக்கைப் படியவிட்டவருடையதே தவறு. அழுக்கைத் தூய்மை செய்யாத நாம் கண்ணாடியை உண்மையையை காட்ட விடாமல் செய்துள்ளோம் என்பதை உணரலாம்.
அதே போல் நம் உள்ளம் தூய்மையாக இருந்தால் உலகம் நல்லதாகத் தென்படும். உள்ளத் தூய்மை இல்லாவிட்டால் உலகம் தீயதாகவே தென்படும். வண்ணக் கண்ணாடி அணிந்து பார்ப்பவருக்கு உலகம் அந்த வண்ணத்தில் தென்படும் என்பது அறிந்த ஒன்றே. இறைவன் அளித்த ஆரோக்கியமான கண்களால் பிரபஞ்சத்தைப் பார்ப்பவருக்கு பிரபஞ்சம் உள்ளது உள்ளபடி தென்படும். சிவப்பு கண்ணாடி அணிந்தவருக்கு உலகமெங்கும் சிவப்பாகவே தென்படும். இடது சாரிகளைக் குறித்து இவ்விதம் கூறுவது வழக்கம்.
ஒரே செய்தியை இருவர் வெவ்வேறு விதமாக சிந்திப்பது எதனால்? ஒரே முகம் ஒருவருக்கு அழகாகத் தோன்றுகிறது. இன்னொருவருக்கு விகாரமாகத் தோன்றுகிறது. Beauty lies in the beholders eyes என்பார்கள். நம் தேசத்தில் நடக்கும் முன்னேற்றமும், உலகநாடுகளில் அதிகரிக்கும் பாரத தேசத்தின் மீதான பக்தியும் இடதுசாரி மற்றும் பிற எதிர்கட்சியினரின் கண்களுக்குத் தென்படுவதில்லை.
மின்சாரம் நின்று போனால் வீடுகளில் படும் அவஸ்தை அனைவரும் அறிந்ததே. இரவு நேரத்தில் லாந்தர் விளக்கை ஏற்றுவார்கள். காலையில் அந்த சிம்னியில் படிந்த கரியைத் துடைத்து தூய்மை செய்வார்கள். இல்லாவிட்டால் கரிபடிந்த சிம்னியால் தீபஒளி சரியாக பிரகாசிக்காது. தவறு தீபத்துடையதல்ல. மேலே படிந்த கரியுடையது.
செக்யூரலிஸ்ட்களின் கண்களுக்கு மஜ்லிஸ்களின் மதப் பற்று தென்படாது. அதுமட்டுமல்ல. உலகெங்கும் தொடர் கொலைகளைச் செய்துவரும் தீவிரவாதிகள், ஜிகாதிகள் போன்றோரின் மத வெறியும் கண்ணில் படாது. தேச பக்தர்கள், தேசிய வாத கட்சியினர் போன்றோரே இவர்களுக்கு பகைவர்களாகத் தென்படுவர். குற்றம் யாருடையது?
தர்மபுத்திரன், துரியோதனன் இருவரைக் குறித்தும் கூறப்படும் கதை இந்த மலின தர்பண நியாயத்திற்குச் சிறந்த உதாரணம். ராஜ்ஜியத்தில் நல்லவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தேடி வரும்படி துரியோதனனிடம் கூறினார் பீஷ்மர். தேசமெங்கும் அலைந்து திரிந்து திரும்ப வந்து நல்லவர் ஒருவர் கூடத் தென்படவில்லை என்று கூறினான் துரியோதனன். தர்மபுத்திரனை கெட்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று தேடி வரும்படி அனுப்பியபோது தர்மபுத்திரனுக்கு அனைவரும் நல்லவர்களாகவே தென்பட்டார்கள். அலைந்து திரிந்து பார்த்து ராஜ்ஜியத்தில் ஒருவர் கூட கெட்டவர் இல்லை என்று கூறினான். பார்க்கும் பார்வையைப் பொறுத்தே நன்மையும் தீமையும் உள்ளது.
ராவண வதைக்குப் பின் ஸ்ரீ ராமன் சீதையிடம், “தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்ருடம்” என்று கூறினான். கண் நோய் உள்ளவனுக்கு தீபம் போல எனக்கு தீமை செய்பவளாக உள்ளாய் என்கிறான்.
ஃபோட்டோ ஃபோபியா என்ற நோய் உள்ளவனுக்கு வெளிச்சத்தைப் பார்த்தால் கண்ணில் கூச்சம் ஏற்படும். தவறு வெளிச்சதுடையது அல்ல. இது மலின தர்ப்பண நியாயத்திற்கு ஒரு உதாரணம்.
மனித மனம் கண்ணாடியைப் போன்றது. அது காமம் குரோதம் போன்ற ஆறுவித உட்பகைகளான தூசி படிந்து மலினமான கண்ணாடி போல மாறி, உண்மையை பிரதிபலிக்க இயலாமல் போகிறது. வண்ணக் கண்ணாடிப் போல மாறிய மனம் உண்மையைப் பார்க்க முடியாமல் போகிறது. தவறு வெளியில் இல்லை. நம்மில்தான் உள்ளது. நம்முடைய மனமாசைக் களைந்தால், துடைக்கப்பட்ட கண்ணாடி போல அது வாஸ்தவமான சத்தியத்தைக் காட்டும்.
‘கண்ணாடியைக் குறை கூறாதே. மாசை சுத்தம் செய்’ என்ற செய்தியை அளிக்கும் நியாயம் இது.