ஆப்தேயை போல வளவளவென வெளிப்படையாக அதிகம் பேசும் சுபாவம் கொண்டவரல்ல கோட்ஸே. ஆப்தேயை ஒரு EXTROVERT என்று கூறினால்,நாதுராம் கோட்ஸே ஒரு INTROVERT. ஆப்தே சந்தித்து வந்தது போல் நாதுராமிற்கு பெரிய பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை.
அவருக்கும் பூனாவில் ஏராளமான உறவினர்கள் இருந்தார்கள். சங்கிலியிலிருந்து நாதுராமின் தந்தையும் பூனாவிற்கு அவருடைய முழு குடும்பத்தோடு குடி பெயர்ந்து வந்து விட்டார். நாதுராமின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் நடந்து முடிந்து,குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு சகோதர் பூனாவில் வசித்து வந்தார். இன்னொரு சகோதரர் கோபால்,பூனாவிலிருந்து 4 மைல் தொலைவிலிருந்த கிர்கியில் வசித்து வந்தார்.
நாதுராம் தன் உறவினர்களை அடிக்கடி சந்தித்து வந்தார். அவர்களில் தன் சகோதரர் கோபாலிடம் அவருக்கு நெருக்கம் அதிகம். இந்த கோபால்தான் பின்னாளில்,காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ACCUSED NO. 6 கோபால் கோட்ஸே.
நாதுராம் கோட்ஸே இவர்கள் யாருடனும் சேர்ந்து வசிக்காமல், பூனாவில் ஷன்வார் பேத் கதவிலக்கம் 334ல் தன் நண்பர் ஒருவரின் இடத்தில் தனியாக ஒரு அறையில் வாடகைக்கு இருந்தார்.
’ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகையின் புதிய அலுவலகம் , அதே ஷன்வார் பேத்தின் கதவிலக்கம் 495 ல் அமைந்திருந்தது. தினசரி தன் அலுவலகத்திற்கு நடந்தே போய் விடுவார்.
நாளுக்கு நாள், மேலும் மேலும் அவருடைய வாழ்க்கை எளிமையாகவும் சிக்கனமாகவும் மாறிக் கொண்டே வந்தது. மிகவும் சாதாரண உணவு உண்டார்.
ஒரு சிங்கில் ஜமுக்காளம். காலையில் எழுந்தால் மடித்து ஒரு மூலையில் போட்டு விட்டு,இரவு படுக்கும் முன் எடுத்து,உதறி தரையில் கிடத்தி ,அதில் படுத்து உறங்கப் போய் விடுவார். அவர் அனுபவித்து சாப்பிட்டது காபி மட்டுமே.ஒரு நாளைக்கு ஆறு காபியாவது சாப்பிட்டு விடுவார்.
நாளின் பெரும்பகுதியை பத்திரிகை அலுவலகத்திலேயே கழித்து வந்தார். ‘ ஹிந்து ரஷ்ட்ரா ‘ பத்திரிகையின் பிரதான கட்டிடத்தின் பின்னாலே அமைத்திருந்த ஒரு கூடாரம்தான் அவர் அறை. முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட நாதுராம் கோட்ஸே மற்றும் நாராயண் ஆப்தே இருவரிடையே,நாதுராம் பின்னணியிலேயே தன்னை இருத்திக் கொண்டார்.
அதற்கான எந்த வருத்தமும் அவருக்கு இல்லை. கடினமாக உழைப்பது அவருக்கு பிடித்த விஷயம். ’ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகையை நடத்துவதில் எழுந்து வந்த அன்றாட பிரச்சனைகளை அவர்தான் எதிர்கொண்டு போராடி சமாளித்து வந்தார்.
ஆனால் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துக் கொண்டே இருந்தனர். தாங்கள் இருவரும் உழைப்பது ஒரு பொது இலக்கிற்காகவே என்று உணர்ந்து, இணைந்து செயல்பட்டனர்.
பத்திரிகை நடத்துகின்ற விதம் பற்றிய விஷயத்தை தவிர,வேறு அனைத்து விஷயங்களிலும்,ஆப்தேயை தன் மூத்த கூட்டாளியாகவே மதித்தார் நாதுராம். ஆப்தே செயல்படுத்த எண்ணியிருந்த அனைத்து திட்டங்கள் பற்றியும் கோட்ஸேயிற்கு தெரியும்.
அவற்றைப் பற்றி நீண்ட,ஆழமான ஆலோசனைகளை,தன் கூடாரத்தில் ஆப்தேயுடன் நாதுராம் நடத்தியிருக்கிறார். துப்பாக்கிகள்,வெடிகுண்டுகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் அவருக்கு அதிகமாக தெரியாது என்ற காரணத்தால்,அந்த விஷயங்களையெல்லாம் ஆப்தேயிடமே விட்டு விட்டார்.
அது தொடர்பான விஷயங்களில் ஆப்தே என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல்,அவர் சொன்னதை செய்வார். ஆப்தேயும் நாதுராமும் ஒரு ஒருங்கிணைந்த குழு என்றால்,வேறு ஒரு விதத்தில் திகம்பர் பாட்கேயும்,அவருடைய வேலையாள் சங்கர் கிஷ்டய்யாவு ம் ஒரு ஒருங்கிணைந்த குழு.
ஒருவரின்றி இன்னொருவரை யோசித்து பார்ப்பதே இயலாது எனும் அளவிற்கு இரண்டு குழுக்களும் இருந்தன. இதில் தனித்து விடப்பட்டது விஷ்ணு கார்கரே மட்டும்தான். ஆனாலும் அவருக்கும் விரைவிலேயே ஒரு பார்ட்னர் கிடைக்க இருந்தார்.
அவர்கள் இருவரும் கூட ஒருங்கிணைந்த குழுவாக உருவாகும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
( தொடரும் )