பிர்லா ஹவுஸ் வளாகத்தை ஆய்வு செய்த பின், கார்கரே ஹிந்து மஹா சபா பவனுக்கு சென்று கோபால் கோட்ஸேயை அழைத்துக் கொண்டு ஷரிஃப் ஹோட்டலிலிருந்த தன் ரூமிற்கு சென்றார்.
அங்கு மதன்லால் பஹ்வா முதல் முறையாக கோபால் கோட்ஸேயை சந்தித்தார். அங்கு மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அங்சேகர் வருகைக்காக காத்திருந்தனர்.
அவர் வந்த பிறகு,அவரிடம் அவர்கள் மூவரும் ஜலந்தருக்கு, மதன்லால் பஹ்வாவின் திருமண விஷயமாக செல்வதாகக் கூறி அங்கிருந்து அவரை காலி செய்துஅனுப்பி விட்டனர். அதன் பிறகு மூவரும்,ஹிந்து மஹா சபா பவனிலிருந்த கார்கரேயின் அறைக்குச் சென்றனர்.
திகம்பர் பாட்கேயும்,ஷங்கர் கிஷ்டய்யாவும் இன்னும் வந்தபாடில்லை. மாலையில்,மதன்லால் பஹ்வாவும் கோபால் கோட்ஸே அறையிலேயே தங்கியிருக்க கார்கரே மட்டும் மெரினா ஹோட்டலில் தங்கியிருந்த ஆப்தேயையும்,நாதுராமையும் சந்திக்கச் சென்றார்.
அங்கிருந்து மூவரும் புது டெல்லி ரயில் நிலையத்திற்கு,ஒரு வேளை FRONTIER MAIL அன்றைய ரயிலில் திகம்பர் பாட்கேயும் வருகிறார்களா என்று பார்க்கச் சென்றனர். ஆனால் அவர்களை பார்க்க முடியவில்லை.
ஒரு வேளை கோபால் கோட்ஸே ரயிலில் வந்த போது அவரை காணாமல் விட்டு விட்டதை போல் இவர்களையும் பார்க்காமல் விட்டு விட்டோமோ என்று கருதி,ஹிந்து மஹா சபா பவனுக்குச் சென்றனர்.
அங்கு அவர்கள் வந்திருந்தனர். அவர்கள் FRONTIER MAIL ரயிலுக்கு பதிலாக PUNJAB MAILல் வந்திருந்ததால் அவர்களை தவற விட்டு விட்டார்கள்.
நாதுராமும், ஆப்தேயும் பவனுக்கு வருவதற்கு முன்,ஹிந்து மஹா சபா பவனில், மதன்லால் பஹ்வாவோடு, ஒரு புது நபர் இருப்பதை திகம்பர் பாட்கேயும், ஷங்கர் கிஷ்டய்யாவும் பார்த்தனர். அவர் நாதுராமின் சகோதரர் கோபால் கோட்ஸே என்று அறிந்து கொண்டனர்.
திகம்பர் பாட்கேயிற்கும் ஷங்கர் கிஷ்டய்யாவிற்கும் அளிக்க தனி அறை கிடைக்காததால், அவர்கள் இருவரையும் ஹாலிலேயே படுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அன்றிரவை அவர்கள் அங்கேயே கழித்தார்கள். ஷர்மாவிடம் திகம்பர் பாட்கே வாங்கி வந்த .32 ரிவால்வர் ஷங்கர் கிஷ்டய்யா வசமிருந்தது.
கோபால் கோட்ஸே கொண்டு வந்த ரிவால்வரை அவரே வைத்திருந்தார். வெடிகுண்டுகளும்,வெடிப்பொருட்களும் மதன்லால் பஹ்வாவின் ‘ஹோல்டாலில்’ இருந்தது.
ஆப்தேயும்,நாதுராமும் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. பெரும் மதக்கலவரங்களை சந்தித்த டெல்லி இப்போது அமைதியாக இருந்தது.
காந்தியின் பாஷையில் கூற வேண்டுமானால்,தன் பாவங்களை கழுவிக் கொண்டு புண்ணியம் அடைந்த நகரமாக இருந்தது. அன்றைய காலை பத்திரிகைகளில், முஸ்லீம்கள் சுதந்திரமாக நடமாடி வருவதைப் பற்றிய செய்திகள்,
அவர்கள் ஊர்வலமாக வந்து,அவர்களுக்கு ஹிந்துக்களும், சீக்கியர்களும் பழங்களும் இனிப்புகளும் வழங்கியதாகவும் செய்திகள் வந்திருந்தன.
இவையெல்லாம் செயற்கையானதாக காட்சி அளித்தன. ஆட்சியி லிருந்த காங்கிரஸ் கட்சியின் ஏற்பாடோ என்று எண்ணத் தோன்றியது. உண்ணாவிரதமிருந்த காந்தியின் உயிரைக் காக்க உருவான அலை இப்போது அடங்கத் தொடங்கி இருந்தது.
அமைதியான மனதோடு,’ அமைதிக்கான உறுதிமொழி ‘யை படித்து பார்த்த போது, அது ஒருமித்ததாக இல்லை என்பதை மக்கள் உணர்ந்தனர்.
(தொடரும்)
- எழுத்து: யா.சு.கண்ணன்