பழைய நண்பர்களுடன் கூட்டணி என்று மோடி சொன்னாலும் சொன்னார்.. உடனே முந்திரிக் கொட்டைத் தனமாக மு.க.ஸ்டாலின் ஏதோ திமுக.,வுடன் தான் மோடி கூட்டணிக்கு வரப் போகிறார் என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசினார்.
வாஜ்பாயுடன் திமுக., கூட்டணி வைத்தது, மோடியின் பாஜக.,வுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்று ஸ்டாலின் கூறினார். உண்மையில் திமுக., இப்போது ஸ்டாலினின் கட்டுப் பாட்டில் இல்லை என்பதும், அவர் பிரிவினைவாதிகளின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார் என்பதும், ஸ்டாலினின் அண்மைக் கால செயல்பாடுகளில் தெளிவாகத் தெரிந்தது.
கருணாநிதி உடல் நலமின்றி இருந்தபோது, கோபாலபுரத்துக்கு வந்து மோடி நலம் விசாரித்ததும், கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செய்ததும், நாடாளுமன்றத்தில் துக்கம் அனுஷ்டித்ததும் ரொம்ப ஓவர் என்று தமிழகத்தில் மோடியை விமர்சனம் செய்யாத தேசியவாதிகள் இல்லை!
இவ்வளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு கருணாநிதியும் ஸ்டாலினும் தகுதி உள்ளவர்கள் இல்லை என்றுதான் அப்போது தேசியவாதிகள் விமர்சனத்தை முன்வைத்தனர். இப்போது ஸ்டாலினின் நாலாந்தர அரசியல் நடவடிக்கைகளைக் கண்டு தங்கள் எச்சரிக்கை உண்மையாகி விட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஸ்டாலினுக்கு பதில் கொடுக்கும் வகையில் மோடி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஊழல் பெருச்சாளி முதல்வர் பதவி வேண்டி கூட்டணிக்கு சுத்தி சுத்தி வந்துது என்று கூறியுள்ளார் மோடி. இதுதான் ஸ்டாலினுக்கு மோடி கொடுத்த அடி!
பிரதமர் மோடி சிவகங்கை, தேனி ஆகிய பகுதிகளிலுள்ள பாஜக., செயல் வீரர்கள் கூட்டத்தில் உரை நிகழ்த்திய மோடி, பாஜக.,வின் வளர்ச்சி குறித்தும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு களப்பணி ஆற்றவேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு எடுத்துக் கூறினார். அப்போது, பாஜக நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, ஸ்டாலினின் விமர்சனம் குறித்தும் பதில் குறித்தும் நிர்வாகிகள் கேள்விகளை முன்வைத்து, கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர்.
அண்மைக் காலமாக, பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்து வந்தார் ஸ்டாலின். அவரது பேச்சு பாஜக.,வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக.,வில் இருக்கும் திமுக.,வின் ஸ்லீப்பர்செல்களின் செயல்பாடுகளால், இவை குறித்து மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் படாமலேயே இருந்தது. இதனால் அடுத்த மட்டத்தில் இருப்பவர்கள், அமைதி காத்துவந்தனர்! நாகரிகமான முறையிலேயே ஸ்டாலினுக்கும் பதிலளித்து வந்தனர்.
இந்நிலையில், நிர்வாகிகள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க, தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓர் ஊழல் பெருச்சாளி, முதல்வர் பதவி வேண்டி நம்மை தனது ஆதரவாளர்களை வைத்து சுற்றிச் சுற்றி வந்தது! ஆனால் பாஜக.,வின் முதல் நோக்கமே ஊழல் அற்ற ஆட்சி அமைப்பதுதான் என்று எடுத்துக் கூறியதும் இப்போது அது நம்மை விமர்சித்து வருகிறது என்று சிரித்தபடியே கூறினார்.
அந்த ஊழல் பெருச்சாளி திமுக., என்பதும் ஸ்டாலின் என்பதும் வெள்ளிடை மலை! காரணம், ஸ்டாலினின் முந்திரிக் கொட்டைத் தனமான பேச்சுகள், அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. சென்னையில் வைத்து அழைக்கப்படாத விருந்தாளியாக ராகுல் காந்தியை வரவழைத்து, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க ராகுலுக்கு தேசிய அளவில் கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்தது.
இப்போது பலவகையிலும் திமுக.,வுக்கு உதவி வந்த மோடியை தேவையிலாமல் தகுதியை மீறி வம்புக்கு இழுத்து, ஸ்டாலின் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். ஸ்டாலின் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா என்று திமுகவின் மூத்த தலைவர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்களாம்.
ஆனால், மோடியின் இந்தப் பேச்சு பாஜக தொண்டர்களுக்கு உற்சாக டானிக் போல் அமைந்திருக்கிறது. காரணம், பழைய நண்பர்கள் என்று மோடி சொன்னது தன்னைத்தான் என்று ஸ்டாலின் கருதிக் கொண்டு பேசியதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.
மோடி சொன்ன அந்தப் பழைய நண்பர்கள் யார் என்று இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை வரும் 18ஆம் தேதி பாஜக தொடங்குகிறது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயல் 18ஆம் தேதி சென்னை வருகிறார். பாஜக.,வின் பழைய நண்பர்களான
அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
ஸ்டாலினை வாரிசு அரசியல் என்ற காரணத்துக்காக என்னதான் ஜால்ரா போட்டு புகழ்ந்து வந்தாலும், அதன் விளைவு என்ன என்பதை திமுக., இரண்டாம் கட்டத் தலைவர்கள் உணர்ந்தே உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இப்போது இந்த மீம்ஸ்தான் சக்கைப் போடு போடுகிறது. துரைமுருகன் சொன்ன அந்த வாசகங்களும், வாசகர்கள் போட்ட மீம்ஸும்!