கோடநாடு சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் கடந்து இப்போது அரசியல் ஆதாயம் கருதி பொய்ப் பிரசாரம் செய்வதாக துணை முதல்வர் ஓபிஎஸ்., கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், உலகத் தமிழர்களுக்கும், இந்திய மக்களுக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய வீடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கோடநாடு சம்பவங்கள் நடைபெற்று 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அடிப்படை ஆதாரமற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள இயலாமல் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆதாயம் கருதி சர்ச்சைகளை கிளப்புகின்றன என்று குற்றம் சாட்டினார்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள முடியாமல்தான் திமுக நீதிமன்றம் சென்றது என்று குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஊகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாவதாகவும், அவசரப்படாமல், பொறுத்திருந்து பாருங்கள் நல்லது நடக்கும் என்றும் கூறினார்.