அனைவரும் மாறுவேடம் அணிந்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என கார்கரே கருத்து தெரிவிக்க அது நல்ல யோசனை என எல்லோரும் ஆமோதித்தனர்.
என்ன மாறுவேடம் அணியலாம் ?
தாங்கள் வழக்கமாக அணியும் ஆடை பாணியை மாற்றினாலே போதுமானது என்று தீர்மானித்தனர்.
திகம்பர் பாட்கே தன்னுடைய காவி உடையை கழற்றி விட்டு,முட்டி வரை நீளும் வெள்ளை நிற ‘ நேரு ‘ சட்டையை அணிந்துக் கொண்டார்.ஒரு டவலை கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டார்.
நாதுராம் ஒரு போலீஸ்காரரைப் போல் காக்கி அரைக்கால் சட்டையும்,மேலே வெள்ளைச் சட்டையும் அணிந்துக் கொண்டார்.
ஆப்தே கறுப்பு நிற ‘ சூட்டும் ‘ கழுத்தைச் சுற்றி ஒரு கறுப்பு நிற ‘ SCARF’ம் அணிந்துக் கொண்டார்.
மதன்லால் பஹ்வா,ஆப்தேயின் விமானப்படையின் நீல நிற ‘சூட்டை ‘ அணிந்துக் கொண்டார்.
கார்கரே போலி மீசையை வரைந்துக் கொண்டார்,புருவங்களை மேலும் கருமையாக்கிக் கொண்டார்,நெற்றியிலே குங்குமம் இட்டுக் கொண்டார்.
இப்போது….
காந்தியை கொல்ல எல்லோரும் தயாராகி விட்டனர்.
அவர்கள் செய்தது அத்தனையையும் கேட்பதற்கு நமக்கு விசித்திரமாகத் தோன்றினாலும்,அவர்களின் மனதிலே,தாங்கள் மேற்கொள்ளவிருந்த காரியத்திலே, அவர்களுக்கிருந்த ‘ நம்பிக்கை ‘ அலாதியானது.
தங்கள் மனதிலே ஆழமாக பதிந்து விட்ட ‘ காந்தியை கொல்லும் திட்டத்தின் ‘ உறுதித்தன்மை,யதார்த்தையெல்லாம் மறக்கச் செய்தது.
‘ காந்தியை கொன்று விட்டு ‘ சர்வ சாதாரணமாக தாங்கள் தப்பித்து கொள்ள முடியும் என்று அவர்கள் எப்படி நம்பினார்கள் என்றே தெரியவில்லை.
டெல்லியை விட்டு உடனே தப்பிச் செல்ல எந்த ஏற்பாட்டையும் அவர்கள் செய்யவில்லை.
20ந் தேதி காலையில்,ஹோட்டல் ‘ சலவைப் பிரிவில் ‘,தங்கள் துணிகளை வெளுக்க நாதுராமும்,ஆப்தேயும் கொடுத்தனர்.ஜனவரி 22ந் தேதி துணிகளை பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர்.
பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்திருந்த சுர்ஜித் சிங் எனும் சீக்கியர் ஒருவர்,எப்படியோ தன்னுடைய டாக்ஸியையும் அங்கிருந்து கொண்டு வந்திருந்தார்.
டெல்லியில் அந்த டாக்ஸியை முறைப்படி ‘லைசென்ஸ் பெறாமல்,தனிப்பட்ட வண்டியாக ஓட்டிக் கொண்டிருந்தார்.
மஞ்சள்-பச்சை நிறத்தில் அமைந்திருந்த அந்த டாக்ஸியில் மேலே பொருட்களை வைக்க வசதியாக ‘ CARRIER ‘ இருந்தது.
மஞ்சள்-பச்சை நிறத்தில் இருந்தபடியால் அதற்கு ‘ மூங்கியா ‘ ( பாசிப்பருப்பு ) என பெயரிட்டு மகிழ்ந்து போயிருந்தார்.
டெல்லியில் அந்த நிறத்தில் வேறு வண்டி இல்லை .
இது போன்ற ‘ CARRIER ‘வசதிக் கொண்ட டாக்ஸி டெல்லியிலேயே அவருடையது மட்டும்தான் எனும் பெருமிதம் வேறு அவருக்கு.
ஜனவரி மாதம் 20ந் தேதி பிற்பகலில் ரீகல் சினிமா திரையரங்கருகே,சவாரிக்காக அவர் காத்திருந்தார்.
நான்கு பேர் அவரிடம் வந்து,பிர்லா ஹவுஸிற்கு தங்களை அழைத்துச் சென்று,அரை மணி நேரம் காத்திருந்து திரும்ப அழைத்து வர வேண்டும் என்று கூறினர்.
வண்டியில் மீட்டர் இல்லாததால் முதலிலேயே வாடகைப் பேசி,அந்த வண்டியில் பயணித்தனர்.
அந்த நால்வர்…
ஆப்தே,கோபால் கோட்ஸே,பாட்கே மற்றும் சங்கர் கிஷ்டய்யா.
வண்டியை பிர்லா ஹவுஸின் பின்புறம் ஓட்டச் சொன்ன ஆப்தே,’ பணியாளர்கள் QUARTERS ‘ அருகில் மற்றவர்களுடன் இறங்கிக் கொண்டார்.
அந்த நுழை வாயில் வழியாக ,பிர்லா தோட்டத்திற்குள் அவர்கள் செல்வதை சுர்ஜித்சிங் பார்த்தார்.
சில நிமிடங்கள்,காரின் அருகே காத்திருந்த அவர்,காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று எண்ணி அதே நுழைவாயில் வழியாக அவரும் உள்ளே நுழைந்தார்.
இவர்களுக்கு முன்னமையே பிர்லா ஹவுஸிற்கு வந்திருந்த நாதுராம்,மதன்லால் பஹ்வா மற்றும் கார்கரே,
ஆப்தே முதலியவர்களை சந்திக்க வந்தார்கள்.
எல்லாம் திட்டமிட்டபடி போவதாக தெரிவித்தார்கள்.
மதன்லால் வெடிகுண்டை தயார் நிலையில் வைத்தார்.ஆப்தே ’ சிக்னல் ‘ கொடுத்தவுடன் அதை வெடிக்கச் செய்வதாகக் கூறினார்.
அந்த சிமெண்ட் ஜாலியிருந்த அறையில் தங்கியிருந்தவரிடம் பேசி,பாட்கே உள்ளே சென்று புகைப்படம் எடுக்க,கார்கரே அனுமதி பெற்று விட்டார்.
நாதுராமும்,ஆப்தேயும்,பாட்கேயுடன் அந்த அறையை நோக்கிச் செல்லும் போது,அந்த அறையின் வாசல் அருகே ஒற்றைக் கண்ணன் ஒருவன் கட்டிலில் அமர்ந்திருப்பதை பாட்கே பார்த்தார்.
ஒரு காரியத்தை தொடங்கும் போது ‘ ஒற்றைக்கண் உடைய நபரை ‘ பார்ப்பதை கெட்டசகுனமாக எண்ணிய திகம்பர் பாட்கே ஆப்தேயிடம் ,
‘’ என்ன ஆனாலும் சரி நான் அறைக்குள் செல்ல மாட்டேன் ‘’ என்று கூறி விட்டார்.
( தொடரும் )