APTE
ANANDASHRAM
POONA
BOTH COME IMMEDIATELY – VYAS
என்று தந்தி அனுப்பப்பட்டது.
VYAS என்பது கார்கரேயிற்கு கொடுக்கப்பட்டிருந்த குறியீடு என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே…..
பிர்லா ஹவுஸில் மதன்லால் பஹ்வா கைதுசெய்யப்பட்டவுடன் என்ன நடந்தது என்பதை பின்னோட்டமாகச் சென்று பார்க்கலாம்.
பிர்லா ஹவுஸின் காவலாளிகள் மதன்லால் தப்பிக்காமல் பிடித்தவுடன் அவருக்கு விலங்கிட்டு பிரதான வாயிலின் வெளியேயிருந்த கூடாரத்திற்கு ( TENT ) தரதரவென இழுத்து வந்தனர்.
அவர்களுக்கு காந்தியை கொல்ல முயன்றவனை பிடித்து விட்டோம் என்று வெற்றி பெருமிதம் .
இளக்காரமாக அவர்கள் முகத்தை பார்த்து மதன்லால் பஹ்வா கூறினார் : ‘’ PHIR AYEGA ‘’ – அவர்கள் மறுபடியும் வருவார்கள்.
மதன்லால் பஹ்வாவின் இந்த அச்சுறுத்தலைக் கேட்ட போலீசார் அதிர்ந்து போனார்கள்.
ஆக பாதிக்கப்பட்ட ஒரு அகதி தன் எதிர்ப்பை தெரிவிக்க பயன்படுத்திய வித்தியாசமான எதிர்ப்பு முறை ( வெடுகுண்டு வீசியது ) அல்ல இது .
அவனுக்கு கூட்டாளிகள் இருக்கிறார்களா ?
( அவர்கள் ) மறுபடியும் வருவார்கள்
யார் ? எப்போது ?
டெல்லி போலீஸின் தலைவர் T.G.சஞ்சீவி பிர்லா ஹவுஸின் பாதுகாப்பை உடனடியாக அதிகரித்தார்.
ஐந்து காவலாளிகள் மட்டுமே இருந்தநிலையில் அது 26ஆக உயர்த்தப்பட்டது.
அந்த 26 பேரில் ஏழு பேர் மஃப்டியில் ( சீருடை அணியாது சாதாரண உடையில் ) இருக்கும்படி உத்தரவிடப்பட்டது.
தன்னுடைய அதிகாரிகளில் சிறந்தவர்களில் சிலரை தேர்வுசெய்து மதன்லால் பஹ்வாவிடம் விசாரணை செய்து அவருடைய கூட்டாளிகள் யார்,அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கண்டறியச் சொன்னார்.
டெல்லி போலீஸின் ஏறக்குறைய 12 அதிகாரிகள் மாறிமாறி மதன்லால் பஹ்வாவிடம் விசாரணை நடத்தினார்கள்.
இந்த கேள்வி கேட்புப் படலம் அடுத்த பத்து நாள் வரை தொடர்ந்தது ; இன்னும் சொல்லப்போனால் ஜனவரி மாதம் 30ந் தேதி மாலை வரை ;
அதன்பின்… அதுவரை நக்ஷத்திர கிரிமனலாகக் கருதப்பட்டுவந்த மதன்லால் பஹ்வா போலீஸ் இம்சையிலிருந்து திடீரென விடுவிக்கப்பட்டு முக்கியத்துவம் இல்லாதவராகிப்போனார்.
அந்த 10 நாட்களும் மதன்லால் பஹ்வாவை விசாரிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வந்த போலீஸ் அதிகாரிகள் – அவர்களுக்கு சற்றே எளிதாகத் தகவல் கிடைக்கக்கூடிய டெல்லியிலிருந்த ஹிந்து மஹா சபாவின் அலுவலகத்தைப் பற்றியே எண்ணிப்பார்க்காமல் போனார்கள்.
மதன்லால் பஹ்வா கைதுசெய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் மெரினா ஹோட்டல் அறையிலே, முந்தின நாள், போலீசார் அஸுதோஷ் லஹிரியின் அறிக்கையை கண்டெடுத்திருந்தார்கள் அல்லவா.
அந்த அறிக்கையை கண்டவுடன் ஹிந்து மஹா சபா கொலை முயற்சி சதியில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று முடிவிற்கு வராமல்,அந்த அறிக்கையை வெளியிட்ட அஸுதோஷ் லஹிரியிடம் அறிக்கைப்பற்றி விசாரித்திருக்கலாம்.
மதன்லால் பஹ்வா விசாரணையின் போது தன் கூட்டாளிகளில் ஒருவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்று கூறியது வேறு யாருமில்லை ; அது ஹிந்து ராஷ்ட்ரா பத்திரிகையின் நாதுராம் கோட்ஸேதான் என்று அஸுதோஷ் லஹிரி உடனே கூறியிருப்பார்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
எழுத்து: யா.சு.கண்ணன்