நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப் பட்ட 1975 – எமர்ஜென்ஸி – நெருக்கடி நிலைக் காலத்தில் பலரும் துன்பங்களை அனுபவித்தனர். அப்போது இந்திரா காந்தி கையாண்ட அடக்குமுறை குறித்து தற்போதைய பாஜக.,வின் மூத்த தலைவரும், அந்நாளைய ஜனசங்கத்தின் தலைவருமான லால் கிஷன் அத்வானி தாம் எழுதிய A Prisoner’s Scrap Book என்ற புத்தகத்தில் எழுதியவற்றில் இருந்து… சிறு பகுதி!
இந்திரா காந்தியை பாசிசவாதி, சர்வாதிகாரி என்று எதிர்த் தரப்பினர் முத்திரை குத்தியதைக் கண்டு அவர் சற்றும் வெறுப்பு கொள்ளவே இல்லை! பாசத்திற்கான விளக்கங்களை பலரும் அவருக்கு ஏற்ற வகையில் இதற்குக் கூறி இருந்ததே காரணம்!
அரசு இயந்திரத்தை தனி நபர் ஒருவர் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதன் மீது தனது ஆதிக்கத்தை செலுத்துவதே பாசிசத்தின் சாராம்சம் என்று அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ஒருமுறை குறிப்பிட்டார்!
ஜனநாயக அமைப்பையும் மீறி அதைவிட வலிமையானதாக ஒரு தனிப்பட்ட மனிதரின் கண்மூடித்தனமான வளர்ச்சியை பொது மக்கள் சகித்துக் கொள்ள நேரும்போது, அது ஜனநாயக சுதந்திரத்திற்கு பாதுகாப்பானது அல்ல; ஊறு விளைவிக்கக்கூடியது என்று தனது ஆழ்ந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்!
அதைப் போலவே பாசிசத்தை முன்னிறுத்தி வளர்ச்சி பெற்றிருந்த முசோலினியும், தீமை பயக்கும் தாராள மயக் கொள்கைகளை வெட்டி எறிந்து விட வேண்டும் என்று எதிராளிகளை ஒடுக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தார்!
போராட்டம் ஒரு குற்றம்! புராதன சமுதாயத்திலும் வன வாழ்க்கையிலும் கடைபிடிக்கப்பட்ட சட்டங்களே போராட்டத்திற்கான உரிமையை வலியுறுத்துகின்றன என்று ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோ தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்!
அதே நேரத்தில் மேற்கத்திய தொழிற்சங்கத்தின் சிறந்த தலைவரான சாமுவேல் கோம்பர்ஸ், போராட்டங்கள் எதுவும் இல்லாத ஒரு நாடு என்று நீங்கள் எனக்கு ஒரு நாட்டைக் காட்டுங்கள்; சுதந்திரம் சிறிதுமற்ற நாட்டை நான் உங்களுக்கு காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்!
ஹிட்லர், நாஜிகளின் எதிர்காலக் கனவைப் பற்றி எழுதுகையில், “ஜனநாயகத்தைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை! தலைமை குணமுடைய ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் இந்த நாடு இருக்க வேண்டும்” என்று போதித்தார்!
நாஜி ஜெர்மனியில் பாசிசம் கீழ்க்காணும் இரு தனித்துவ குணாதிசயங்களை உருவாக்கியது!
முதலாவது – அரசின் கொள்கைகளையும் முடிவுகளையும் விளம்பரப்படுத்தி மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் முக்கிய கருவியாக பிரச்சார சாதனங்களை ஆக்குதல்!
இரண்டாவது – பயங்கர நடவடிக்கைகள் மூலம் பாமரர்களை நிரந்தரமான பதற்ற நிலையிலும் தன்னிலையற்ற நிலையிலும் வைத்திருத்தல்!
- இதுவே பாசிசத்தின் உள்கட்டமைப்பு. இதன் முக்கியமான உட்பகுதிகள்…
- அரசு அதிகாரம், தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு குழுவின் கைகளில் கட்டுண்டு கிடப்பதில் எப்போதும் கவனமாக இருத்தல்!
-
குடிமக்களின் சுதந்திரத்தை கட்டுக்குள் வைத்திருத்தல்.
-
தொழிலாளர் சங்கங்களின் உரிமைகளை ஒடுக்குதல்
-
அரசின் கொள்கை பரப்புக் கருவிகளாக பிரச்சார சாதனங்களை வைத்திருத்தல்
-
மாற்றுக் கருத்து உடையவர்களை ஒடுக்கும் பேய்த்தனமான நடவடிக்கைகளில் நம்பிக்கை கொள்ளுதல்… ஆகியனவே!
எனவே மேற்கண்ட இந்தச் சூழ்நிலைகளை இந்திய எமர்ஜென்சியுடன் பொருத்திப் பார்த்தால் பாசிஸ்டுகள் யார் என்ற கேள்விக்கு வெளிப்படையான பதில் கிடைத்துவிடும்!
1975 ஜூன் 26 முதல் இந்திய ஜனநாயகம் என்ற பகலவனை பனிச் சிகரங்கள் சூழ்ந்து மூடி இருந்த போது, ஜனநாயக கட்டடத்தை பாசிசம் தன் வசப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாகவே, “இந்தியாவே இந்திரா! இந்திராவே இந்தியா!” என்று அன்றைய காங்கிரசின் தலைவர் தேவகாந்த் பரூவா கூறியதில் எந்த தவறும் காண நேரவில்லை!
அரசியல் ரீதியில் தனிநபர் துதி பாடுவதும், ஆராதனை செய்வதுமான இந்த அநாகரீக வர்க்கத்தை உருவாக்குவதுதான் பாசிச அமைப்பின் முதலும் இறுதியுமான சிறப்பு குணம்!
அறிவுக்கு ஒவ்வாத வகையில் தனி நபர் ஒருவரை கடவுளாகத் தொழுது மண்டியிட்டு வணங்குவது பாசிசத்தின் முக்கிய குணம் என்பார் வின்ஸ்டன் சர்ச்சில்.
காரசாரமான விவாதங்களையும் விமர்சனங்களையும் ஒரு ஜனநாயகவாதி வரவேற்பது, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம்!
மறுபுறத்தில் ஒரு பாசிசவாதி சுயநலனுக்கும், சுய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுமானால், அல்லது தனது கட்சிக்கு ஆபத்து ஏற்படுமானால் அதை தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே பிரகடனப்படுத்துகிறார். எதிர்க்கட்சியினரை நாட்டின் எதிரிகளாகக் கருதும் மனோபாவத்தை மக்கள் மத்தியில் விதைக்கிறார்!
அரசியல் சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறார்! தலையாட்டி பொம்மைகளையே பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளாக நினைக்கிறார்!
நம் தேசத்திற்கு ஜூன் 1975 அன்று அளிக்கப்பட்ட மன அதிர்ச்சி, அதிகார சிந்தனைகளின் வெளியீடே!
எதிர்க்கட்சியினரின் சத்தியாகிரக போராட்டமும் கிளர்ச்சியும், இதற்கு எதிராக உடனடியாக எதுவும் செய்ய இயலாமல் போனது!
தமிழில்: செங்கோட்டை ஸ்ரீராம்