மகளிருக்கு அதிகாரம் அளித்தல் என்பதன் அவசியத்தை வலியுறுத்துவது நவராத்திரி என்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார் பாஜக., மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில்…
La Ganesan: “மகளிருக்கு அதிகாரம் அளித்தல்” அதாவது “மஹிளா சக்தி கரன்” குறித்து மாநிலங்கள் அவையில் ஒருமுறை விவாதம் நடந்தது. அந்தத் திட்டத்தை வரவேற்றுப் பேசுகையில் “சக்தியே அவர்கள் தானே! சக்திக்கே சக்தி அளிப்பதான திட்டம்!” என்று நான் பேசினேன்.
பெண்டிரைப் போற்றுதல் பாரதப் பண்பாடு. மகளிரை நாம் சக்தி ஸ்வரூபமாகவே காண்கிறோம், வழிபடுகிறோம். அதன் ஒரு வெளிப்பாடு தான் நவராத்திரி பூஜை. சக்தியை நமது வீடுகளில் ஆவாஹனம் செய்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ரூபங்களில் வழிபட்டுப் பெண் சக்தியைக் கொண்டாடுகிறோம்.
இன்று ஒன்பதாம் நாள். அறியாமை எனும் இருள் அகற்றிட, அஞ்ஞானம் போக்கிட, விஞ்ஞானமும் மெய்ஞானமும் அறிவில் சுடர்விட, அருள்தரும் அன்னையை வணங்கிடும் “சரஸ்வதி பூஜை” இன்று.
அதோடு கூடவே “ஆயுத பூஜை”. அதர்மம் அழித்திட அவதாரம் எடுத்த சக்தி அவள் தனது ஆயுதங்களைப் பூஜித்த நாள். அந்த ஆயுதங்களைக் கொண்டு அதர்மத்தை வெற்றி கொண்ட நாள், நாளை வரும் “விஜய தசமி”. அத்துடன் நவராத்திரி நிறைவு பெறும்.
வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் வாக்தேவி, வீணாவாணி, கலைமகளின் பொற்றாமரைப் பாதம் பணிவோம்! சமுதாய, தேச முன்னேற்றத்துக்காக அறிவென்னும் ஆயுதத்தை பிரயோகிப்போம்.
அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! ????️