நித்யானந்தாவின் பெண் சீடர்கள் 2 பேர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதியிடம் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது.. இங்கு தங்கியிருந்த தன்னுடைய 2 மகள்களையும் மீட்டுதர வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் காவல்துறையில் புகார் தந்தார்.
நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்ற போது ஜனார்த்தன சர்மாவின் மகள்களையும் அவருடன் அழைத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தை தெரிவித்திருந்தார்.
மேலும் குஜராத் ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவையும் ஜனார்த்தன சர்மா தொடர்ந்திருந்தார், இந்த மனு மீதான விசாரணை தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது. மற்றொரு புறம் மாயமான நித்யானந்தாவை தேடும் பணியினையும் குஜராத், பெங்களூர் காவல்துறையினர் தீவிரமாக முடுக்கி விட்டுள்ளனர்.
இதனிடையே, ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்கள் சார்பிலும் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமெரிக்காவின் விர்ஜீனியாவில் தற்போது இருப்பதாகவும் சொல்லி இருந்தனர். 2 பெண் சீடர்கள் மாயமான நிலையில், இந்த பிரமாண பத்திரம் மிக முக்கிய திருப்பத்தை தந்தது.
இந்த நிலையில் ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் 2 பேருமே மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்டாஸ் நாட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார்கள்.
அப்போது, “நாங்க சந்தோஷமா இருக்கோம்.. ரொம்ப சுதந்திரமாக இருக்கோம்.. அப்பாவால்தான் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை” என்றனர்.
ஆனால் 2 சீடர்கள் சொல்வதையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். வருகிற 16-ந் தேதிக்குள் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் சம்பந்தப்பட்ட 2 பெண்களும் எந்த நாட்டில் உள்ளனர் என இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குஜராத் காவல்க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்க ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.