ஸ்ரீசைலம் விவாதத்திற்கு முடிவுகட்ட, பிஜேபி மற்றும் இந்து அமைப்பு களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தடை பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீசைலம் ஆலயம் குறித்த விவாதங்கள் பெருகி பரபரப்பு அதிகமான நிலையில் ஜெகன் அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. கடைகளை ஏலம் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், ஆலய செயல் அதிகாரியை பணி மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகழ் பெற்ற சிவஸ்தலம் ஸ்ரீசைலம் ஆலயத்தில் கடைகள் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு ஆந்திர அரசு மங்களம் பாடியுள்ளது. கடைகளை ஏலம் எடுப்பதை நிறுத்துவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோவில் செயல் அதிகாரி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை பணி மாற்றம் செய்துள்ளது. கோயில் புதிய செயல் அதிகாரியாக எஸ். ராமாராவ் நியமிக்கப்பட்டுள்ளார் .
அமைச்சர் வெல்லம்பல்லி ஸ்ரீனிவாஸ் உத்தரவுப்படி அறநிலையத்துறை ஆணையர் ஆக.19 திங்கள் கிழமை மாலை இதற்கான உத்தரவுகளை வெளியிட்டார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை சாதாரண அரசாங்கத் துறையில் ரிப்போர்ட் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீசைலம் ஆலயத்தில் கடைகள் ஏலம் எடுப்பது குறித்து வாக்குவாதங்கள் சில நாட்களாக நடந்து வருகிறது. அது பரபரப்பாக மாறிய நிலையில் ஆலயத்தில் பிற மதத்தவர் ஆதிக்கம் அதிகமாகி விட்டது என்றும் வியாபாரம் நடத்துவதற்கு அவர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கப் படுவதாகவும் பிஜேபி உடன் பல ஹிந்து தார்மீக சங்கங்கள் ஆத்திரம் அடைந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுடன், கோயில் கடைகள் ஏலம் போடப் படுவதை தடுக்க முயன்றனர்.
பிற மதத்தவரிடமிருந்து ஸ்ரீசைலத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் ஏலம் போடுவதற்கு வந்தவர்கள் இடையே வாக்குவாதம் பெருகி தகராறாக மாறியது.
கடைகளை ஏலம் எடுக்க முஸ்லிம்களே வந்துள்ளதாக பிஜேபி தலைவர் ‘பட்டா ஸ்ரீகாந்த்’ குற்றம் சாட்டினார். பிற மதத்தவருக்கு ஆலய செயல் அதிகாரி கொம்பு சீவுகிறார் என்று அவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அவருடைய ஆதரவாளர்கள் நான்கு நாட்களுக்கு முன் பலரை தாக்க முயன்றதால் ஸ்ரீசைலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள் அன்று எம்எல்ஏ ராஜாசிங் செய்த அறிவிப்பால் சூழ்நிலை மேலும் சூடாகியது. ஸ்ரீசைலம் விவாதம் குறித்து கோபமடைந்த தெலங்கானா பாஜக., எம்எல்ஏ ராஜாசிங் ஆலய செயல் அதிகாரியின் நடவடிக்கை குறித்து ஆத்திரம் அடைந்துள்ளார். ஹிந்துக்களின் மனோபாவத்தை நோகடித்து ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துக்கு கடைகளை எவ்வாறு ஒதுக்கலாம் என்று கேள்வி எழுப்பினார்.
இதன்படி ட்விட்டரில் ஒரு வீடியோவை போஸ்ட் செய்தார். பிற மதத்தவரிடமிருந்து ஸ்ரீசைலம் கோவிலைக் காப்பாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்தச் சூழலில் செவ்வாயன்று (இன்று) ‘சலோ ஸ்ரீசைலம்’ நிகழ்ச்சியை நடத்தப் போவதாக குறிப்பிட்டார். அந்த நிகழ்ச்சியில் ஹிந்துக்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும் என்று கூறினார். ஸ்ரீசைலத்தில் பரபரப்பு அதிகமானதால் போலீசார் உஷார் படுத்தப் பட்டனர்!
ஸ்ரீசைலம் எல்லையில் போலீஸார் சட்டப் பிரிவு 30ஐ அமல் படுத்தியுள்ளனர். இதை அடுத்து ஆலய சுற்றுப் பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். எந்த ஆர்ப்பாட்டங்களுக்கோ கூட்டங்களுக்கோ அனுமதி இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளனர்.
சலோ ஸ்ரீசைலம் நிகழ்ச்சிக்குச் செல்ல விடாமல் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக பாஜக.,வினர் பலரை கைது செய்துள்ளனர். இந்தச் சூழலில் ‘தள்ளாயபாலெம்’ பீடாதிபதி சிவசுவாமியை கைது செய்து விஜயவாடாவுக்கு அனுப்பி விட்டதாகத் தெரிகிறது.
ஸ்ரீசைலம் ஆலயத்தில் கடைகள் ஏலம் தொடர்பான வாக்குவாதம் குறித்த முழு விவரங்கள் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வெல்லம்பல்லி கூறியுள்ளார். மொத்தத்தில் ஜெகன் அரசு புதிதாக எடுத்துள்ள முடிவால் பாஜக.,வுக்கு தலைவலி அதிகரித்துள்ளது.