தலைமுறை தலைமுறையாக இயலாது என ஒதுக்கப் பட்டவற்றை நிறைவேற்றி, நவீன இந்தியா சாதித்துள்ளது; நவீன இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன் என்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பாரீஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்தில் அதன் தலைவர் ஆண்டிரி அசோவ்லேவை மோடி சந்தித்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற கம்யூனிடி விழாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 130 கோடி இந்திய மக்களுக்கும் நன்றி. இந்தியாவின் சிறந்த அணு இயற்பியலாளர் ஹோமி பாபாவை இந்நேரத்தில் தலை வணங்குகிறேன்.
Community connect. Watch from Paris. https://t.co/sCqcEtcc0v
— Narendra Modi (@narendramodi) August 23, 2019
இந்தியா தற்போது முன்னேறி வருகிறது. நாம் வெறும் ஆட்சி மட்டும் நடத்தவில்லை. நவீன இந்தியாவை உருவாக்கி வருகிறோம். நவீன இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன்.
நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றி வருகிறோம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.
இது கால்பந்தாட்ட பிரியர்களின் தேசம். இங்கு நான் இப்போது வந்திருக்கிறேன். கால்பந்தாட்டத்தில் கோல் அடிப்பதன் முக்கியத்துவம் என்ன என உங்களுக்கு தெரியும். அது அளவிட முடியாத சாதனை.
இதற்கு முன் நடக்கவே முடியாது என கூறப்பட்டவற்றை கடந்த 5 ஆண்டுகளாக இலக்காக நிர்ணயித்து அதை அடைந்துள்ளோம். நவீன இந்தியாவில் ஊழல், சலுகை, மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக, முன் எப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பதவியேற்று 75 நாட்களுக்குள் பல திடமான, துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் அறிவீர்கள்.
இந்தியா – பிரான்ஸ் இடையே உறவு நிலையாக உள்ளது. இந்தியாவும் – பிரான்ஸும் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இணைந்து செயல்பட்டு வருகின்றன… என்றார் மோடி.
முன்னதாக, ஐரோப்பிய நாடான பிரான்ஸுக்குச் சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரனுடன் பேசினார். பின்னர், இன்று பாரீசில் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடனும், தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நாகஸ்வர – மேளம் முழங்க தமிழ்ப் பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.