வீடுகளுக்கு, வாகனங்களுக்குக் கடன், நுகர்பொருட்கள் விலைக் குறைப்பு, ஜிஎஸ்டி வரியில் உள்ள குறைபாடுகளைக் களைதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் இந்த சந்திப்பில் வெளியிட்டார்.
ஆர்பிஐ-யின் வட்டிக்குறைப்பு நேரடியாகக் கடன் வாங்குவோருக்குப் பயனளிக்க வசதிகள் செய்யப்படும். மேலும் வீடு, வாகனம் மற்றும் சில்லரைக் கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை எளிதாக்கப்படும்.
வீட்டுக் கடன் நிதி நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் இதன் மூலம் மொத்த ஆதரவு ரூ.30,000 கோடியாக இந்தத் துறைக்கு இருக்கும் என்றார் நிர்மலா சீதாராமன்.
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆதார் அங்கீகாரம் பெற்ற வங்கியின் கே.ஒய்.சி முறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்; இதன் மூலம் ஒவ்வொரு முறையும் ஆதார் அட்டையைக் கொண்டு செல்லும் நடைமுறை தவிர்க்கப்படும் என்றார்.
உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. உலக பொருளாதார மந்தம் என்பது ஒன்றும் புதிது அல்ல. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனாவை விட இந்தியா பொருளாதாரம் நன்றாக உள்ளது. மந்த நிலை என்ற தகவல் தவறானது, என்றார் நிர்மலா சீதாராமன்.
பேட்டியின் போது செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் சிலமுறை கடுகடுவென நகர்ந்தார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து அவர் கூறிய போது…
உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாகவே உள்ளது. அமெரிக்கா , பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் கூட பொருளாதார சரிவை சந்திக்கின்றன. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு.
உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீத அளவிலேயே உள்ளது.
அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொருளாதார சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்றார்.
வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.
கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும்.
இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறுசிறு குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும், எளிமைப்படுத்தப்படும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப் பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். நீண்டகால குறுகியகால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது.
மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, நிதி எண் 2 சட்டம் 2019- ஆல் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீட்டமைக்கப் படுகிறது.
வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை.
பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் தரப்படும்.
ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து, பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.
கடந்த 2014-ல் இருந்து சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மத்திய அரசின் முதன்மை பணியாக அதுவே உள்ளது, ஜி.எஸ். டி இன்னும் எளிமையாக்கப்படும்.
கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது. அதற்கு பதிலாக சிவில் குற்றமாகவே கருதப்படும்.
அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு அனைத்து வருமான வரி உத்தரவுகள், அறிவிப்புகள், சம்மன், கடிதங்கள் போன்றவை மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பு மூலம் வழங்கப்படும்.
ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும். மத்திய பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறை வேற்றும்.
பொதுத்துறை வங்கிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும். வங்கிகளுக்காக மூலதன உதவி மூலம் கடன் வளர்ச்சி அதிகரிக்கும்.
வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரே நாளில் தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான சூழ்நிலை உள்ளது. சட்ட விதிகள் தொடர்பான அனைத்து சிக்கல்களும் உடனுக்குடன் களையப்படுகிறது!
India’s economy remains resilient and despite global slow down is performing well. Our govt has been fiscally prudent while prioritising growth. Today’s announcements by FM @nsitharaman only reinforce the fact that Modi 2.0 is committed to make India a 5 trillion dollar economy.
— Amit Shah (@AmitShah) August 23, 2019