மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.
பாஜக.,வின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்தவர். மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். கடந்த மோடி அமைச்சரவையில் (2014-2019) நிதி அமைச்சராக பதவி வகித்த அருண் ஜேட்லி அண்மைக் காலமாக உடல் நலக் குறைவால் அவதிப் பட்டார். எனவே இந்த முறை அவர் தேர்தலில் போட்டியிடவும் ஆர்வம் காட்டவில்லை; அமைச்சரவையிலும் பங்கேற்க மறுத்துவிட்டார்.
பழுத்த அரசியல்வாதி; மூத்த வழக்கறிஞர்; பாஜக., மூத்த தலைவர் என முக்கிய இடத்தில் இருந்தவர். அண்மைக் காலமாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதத்தில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எய்ம்ஸில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சிகிச்சைக்காக சென்றார். அந்த நேரம் அவரது நிதி அமைச்சகப் பொறுப்பை பியூஷ் கோயல் கவனித்து, பட்ஜெட்டை சமர்ப்பித்தார்.
இந்நிலையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கடந்த 9ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அருண் ஜேட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இரு தினங்களுக்கு முன்னர் கூட அவர் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பப் பட்டது. ஆயினும், அவர் உடல் நிலை சற்று முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குடும்பத்தார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பாஜக., தலைவர், பிரதமர் என தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரைப் பார்த்து வந்தனர். சுவாசக் கருவிகளின் உதவியுடன் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில் பகல் 12 மணி அளவில் அவர் காலமானதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மோடி தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவர் நன்றாக வாழ்ந்தார், மிகவும் அற்புதமான தருணங்களை நமக்காக விட்டுச் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.