எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது என்றும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு உலக நாடுகளே பொறுப்பு என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒரு மாநிலமாகத் திகழும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப் பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாட்டிற்கு இடையே போர் மூளும் சூழல் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிவருகிறார்.
இந்நிலையில் இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு அருகே பாக், கோட்லி பகுதியில் சுமார் 2,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது. இந்திய எல்லையில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கைபர் பக்துங்க்வா மாகாணம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் ரேடியோ பாகிஸ்தான் வானொலியில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும்; இந்தியா- பாகிஸ்தான் இடையே அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் அதற்கு உலக நாடுகளே பொறுப்பு என்று கூறியுள்ளார்.
அதேபோல், காஷ்மீருக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வா குறிப்பிட்டுள்ளார்!