நிலவுக்கு ஆராய்சி செய்வதற்காக அனுப்பப் பட்ட சந்திரயான் 2 திட்டத்தில், நிலவில் தரை இறங்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசிக் கட்டத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம், ஆர்பிட்டர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தெற்குப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்துடன் நிலவில் தரையில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விக்ரம் லேண்டர் மற்றும், நிலவின் சுற்றுப் பாதையில் அதனுடனேயே சுற்றி ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்பிட்டர் ஆகியவை அனுப்பப் பட்டன.
விக்ரம் என்று பெயரிடப் பட்ட லேண்டர் மட்டும், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தொலைவு இருக்கும் போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையுடனான சிக்னலை இழந்தது. இதனை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த லேண்டர் சாதனத்துக்கு ஆயுட்காலம் 14 நாட்கள் தான் என்பதால், அதற்குள் விக்ரம் லேண்டரின் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ சிவன் கூறியிருந்தார்.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரை இறங்கி இருக்கும் பகுதி கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக இஸ்ரோ சிவன் கூறியுள்ளார்.
லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்ப்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளதாகவும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்கவில்லை என்றாலும், விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் கூறினார்.
இந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் தரை இறங்குவதற்கு திட்டமிடப் பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த லேண்டரை உடன் அனுப்பப் பட்டு சுற்றுப் பாதையில் இருந்த படி புகைப்படங்களை எடுது அனுப்பும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார் சிவன்.