செப்.14ம் தேதி இன்று தேசிய அளவில் ஹிந்தி மொழியை பிரபலப் படுத்துவதற்காக, ஹிந்தி நாள் கொண்டாடப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட, குஜராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர், ஹிந்தியை தேசிய மொழியாக அனைவரும் கற்க வேண்டும் என்றும் ஒற்றுமை நமக்குள் பலப்பட ஒரே மொழியை அனைவரும் பேசவாவது வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்து ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக.,வுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் அமித் ஷா குறித்து வெறுப்புக் கருத்துகள் பரவின. இதற்காக டிவிட்டரில் ஹேஷ் டேக் பதிவு செய்து பலர் கருத்து தெரிவித்தனர்.
மாநிலக் கட்சிகள் இவ்வாறு தங்கள் மாநிலம், தங்கள் மாநில மொழி என்று முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்வது ஓரளவு புரிந்து கொள்ளத் தக்கதுதான். ஆனால், தேசியக் கட்சி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதே போன்று குரல் கொடுப்பது அபாயகரமானது மட்டுமல்ல, வெட்கக் கேடானதும் கூட!
காரணம், ஹிந்தி மொழியைப் பரப்பவும், மக்களுக்கு ஹிந்தி மொழி பேச்சளவிலாவது இணைப்பு மொழியாக இருக்கவும் ஹிந்தி பிரசார சபாக்கள் தொடங்கப் பட்டன.
1918இல் நாடெங்கும் ஒரே தேசிய எண்ணம் வளர வேண்டும் என்பதற்காக, மகாத்மா காந்திதான் தென்னிந்தியாவில் தென்னிந்திய ஹிந்தி பிரசாரசபா (தக்ஷிண ஹிந்தி பிரசார சபா) வைத் தொடங்கி வைத்தார். இந்த சபாவின் முதல் பிரசாரகராக இருந்தவரும் மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்திதான்.
ஹிந்தி பிரசார இயக்கம் என்பது, இந்திய தேசியத்தின் இயக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற சுதந்திரப் பிரசார இயக்கமாகவும் திகழ்ந்தது. திருச்சியிலும் சென்னையிலும் இதன் மையங்கள் சிறந்து விளங்கின. தேசியத்தை வலுப்படுத்தவும், நாடு முழுதும் மக்கள் ஒரே எண்ணத்தைக் கொண்டிருக்கவும் தேச ஒற்றுமையை வலுபடுத்தவும் ஹிந்தி பிரசார இயக்கத்தை, இந்திய தேசிய காங்கிரஸ் கையில் எடுத்து மேற்கொண்டது.
அதே நேரம், ஆங்கிலேயர், இந்தி எதிர்ப்புப் பிரசாரத்தை வலுப்படுத்தவும், தங்கள் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்யவும், ஆங்கில ஆதரவுப் பிரசாரத்தை முன்னெடுத்தனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்யவே, கிறிஸ்துவ சர்ச்சுகளின் மூலம் பள்ளிகள் பல திறக்கப் பட்டு, ஆங்கிலக் கல்வி போதிக்கப் பட்டது. அதற்காகவே ஆங்கிலேயர்கள் திராவிடப் பிரிவினையைப் புகுத்தி, திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்தனர். கிறிஸ்துவ ஆங்கிலேயர்களின் அடியாட்களாகத்தான் திராவிட இயக்கத்தினர் தமிழகத்தில் வளர்ந்தனர்.
அவர்களுக்கு எதிராகவே தேசியத்தை முன்னிறுத்தி வளர்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமைப் பொறுப்பை வகித்த மகாத்மா காந்தியே, 1927ல் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா எனும் அமைப்பை தனியாகப் பிரித்து, அதன் தலைவராக தமது கடைசிக் காலம் வரை இருந்து வந்தார். இது, ஹிந்தி பிரசார சபா என்ற வித்து விதைக்கப் பட்டதன் 101ம் ஆண்டு.
ஆனால், காங்கிரஸ் கட்சி இந்திரா காலத்துக்குப் பின்னர் உடைந்து, அது இந்திரா காங்கிரஸ் ஆன பின்னர், பழைய காங்கிரஸின் தேசியத் தன்மை அதனில் காணாமல் போனது. அதையே, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் இன்றைய தலைவர் கே.எஸ். அழகிரி வெளிப்படுத்திய கருத்து கட்டுகிறது.
ஒரே மொழி குறித்த கருத்தை அமித்ஷா உடனடியாக திரும்பப் பெற வேண்டும், இல்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கே.எஸ்.அழகிரி இன்று எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.
அதே நேரம், இவரது இந்திரா காங்கிரஸாக இருந்து தேசிய காங்கிரஸாக பின்னர் பெயர் மாற்றிக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்த பச்சைத் தமிழரும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவருமான ப.சிதம்பரம், மத்திய அரசு ஹிந்தியை அரசு அலுவல் மொழி ஆக்க வேண்டும் என்று பேசினார்.
ஹிந்தி திவஸ் என்று ‘இந்தி மொழி தினம்’ கொண்டாடியது முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு.. அப்போது, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஹிந்தியை தாம் வரவேற்பதாகவும் அதற்காக மகிழ்வதாகவும் கூறினார். மேலும், நாட்டின் மொழி ஹிந்தியை அரசாங்க மொழி ஆக்கவும், நாடு முழுவதற்குமான மொழி ஆக்கவும் தாம் விரும்புவதாகவும் கூறினார்.
பாஜக ஹிந்தியை திணிப்பதாக வெகுண்டெழுந்து புலம்பிய ப.சிதம்பரம் தாம் உள்துறையில் இருந்த போது உளறாமல் பேசினார். இந்தியா முழுவதும் ஹிந்தியை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
இப்போது இரட்டை வேடம் போடும் தமிழக காங்கிரஸ், அன்று ப.சிதம்பரம் பேசியதற்கு கடும் விளைவுகளைக் கொடுத்ததா? சிதம்பரம் பேசியதற்கு மன்னிப்பு கேட்டதா? அல்லது இன்று பாஜகவை விமர்சிப்பதற்கு மன்னிப்பு கேட்குமா? மொழி அரசியலைக் கையில் எடுக்க காங்கிரஸ் அருகதை அற்றது என்பதை கே.எஸ்.அழகிரி உணர்ந்து கொள்வாரா?!