ஏழு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் – ஹூஸ்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹூஸ்டனில் நடக்கும் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பார்லிமெண்ட் செனட்டர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
மோடி வருகை குறித்து ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டர்னர் கூறியபோது, இந்தியா உலகின் முன்னணி வர்த்தக நாடாகத் திகழ்கிறது. இந்தியா ஸ்டார்ட்அப் நாடாகவும் உள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையால் இரு நாடுகளுக்கு இடையிலான எரிசக்தி, மற்றும் வர்த்த உடன்பாடு வலுவடையும் என்று கூறினார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ‘ஹவுடி மோடி’ (haudi modi) நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று உரையாற்றும் நிகழ்ச்சி பெரிய அளவில் திட்டமிடப் பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி ஸ்டேடியம் இந்த நிகழ்ச்சிக்காக பெருமளவில் தயாராகியுள்ளது
பிரதமர் மோடி தன் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான 20 பில்லியன் அமெரிக்க டாலர் வரிவிதிப்பு குறைப்பு அறிவிப்பினை வெளியிட்டார். இந்த வரிக் குறைப்பு மூலம் அமெரிக்க நிறுவனங்களின் கவனத்தை இந்தியா ஈர்க்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
வரும் செப்.25ஆம் தேதி ப்ளூம்பெர்க்கில் 40 நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.
ஹூஸ்டனில் நடந்த அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மோடியின் அமெரிக்க பயணத்தின் முதல் கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் மோடி. இந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், வெளியுறவு செயலர் விஜய் கோக்லேயும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 16 நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா – ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ஈரான் ஈராக்கை காட்டிலும் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் வெளியிட்ட செய்தியில், ஹூஸ்டன் நகரில், எரிசக்தித் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பு பலன் உள்ளதாக இருந்தது. எரிசக்தித் துறையிலும், இந்தியா அமெரிக்கா இடையிலான முதலீடு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.