புதுச்சேரியில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் தந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
புதுச்சேரியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரெயின்போ நகரைச் சேர்ந்த 23 வயது பெண். இவர் மும்பையைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் வர்த்தக மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
அன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னாடியே 2 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். இதை இந்த பெண் வெகு நேரமாக கவனிக்கவில்லை.
தனது வீட்டை அந்த பெண் நெருங்கிவிட்டர். உடனே பைக்கை தெருமுனையிலேயே நிறுத்தி விட்டனர். அதில் இருந்து ஒருவர் இறங்கி ஓடிச்சென்று திடீரென அந்தப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு ஓடிவிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண், அலறி கத்தினார். ஆனால் அந்த நேரத்தில் தெருவில் யாருமே இல்லை. அதற்குள் பைக்கில் 2 பேரும் தப்பிவிட்டனர்.
இதையடுத்து, அந்த பெண் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அத்துடன் நில்லாமல் ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்ஸ்அப் மூலம் புகாரை அனுப்பினார். அந்த புகாரை அப்போதே படித்துள்ளார் கிரண்பேடி. உடனடியாக, காவல்துறையினருக்கு கிரண்பேடி அதிரடி உத்தரவிட்டதன் பேரில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர்.
இதனால் முத்தம் கொடுத்த இளைஞரை கொஞ்ச நேரத்தில் பிடித்துவிட்டனர். வயசு 19 தான் ஆகிறது.. பெயர், மொட்டத்தோப்பு ரிஷி என்பதாம். உடன் வந்த நண்பனுக்கு வயசு 17 ஆகிறதாம். மொட்டத்தோப்பு ரிஷியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், “நானும் என் ஃபிரண்டும், தண்ணி அடிச்சிட்டு பைக்கில் வந்துட்டு இருந்தோம்.
அப்போது அந்தப் பெண்ணை பார்த்தோம். என் நண்பன் என்னிடம், ‘அந்த பெண்ணைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முடியுமா’ என்று பந்தயம் கட்டினார். நானும், “முத்தம் கொடுத்து, சவாலில் ஜெயித்து காட்டுகிறேன்” என்று சொல்லி, அதன்படியே செய்தேன் என்றார்.
சம்பந்தப்பட்ட பெண் இதையெல்லாம் சின்ன விஷயமாகவோ, அல்லது வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்று நினைத்து, பயந்து ஒதுங்கிவிடாமல், உடனடியாக துணிச்சலுடன் காவல்துறைக்கு தகவல் சொல்லியது. அடுத்ததாக, ஆளுநர் கிரண்பேடி அந்த சமயத்தில் வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ படித்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டது. இந்த 2 விஷயங்களும் பாராட்டிற்குரியது.