வகுப்புக்குள் நுழைந்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில், ஆஷாதீப் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஆசியராகப் பணியாற்றி வந்தவர் விபுல் கஜேரா. இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று, 12 ஆம் வகுப்பு மாணவனை அடித்ததாக் கூறப்படுகிறது. அதனால், நேற்று வகுப்புக்குள் நுழைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
அவரது வகுப்பு மாணவன் ஒருவன் கழிப்பறையில் ஒழுங்கீனமாக கத்திக் கொண்டு இருப்பதாக அவரிடம் புகார் அளித்துள்ளனர். அப்படி, நடந்து கொண்டதற்காக ஆசிரியர் மாணவனை முதலில் கண்டித்துள்ளார். பின்னர், மாணவன் பதிலுக்கு எதையோ கூற ஆசிரியர் கஜேரா மாணவரை அடித்துள்ளார்.
மாணவர் வீட்டுக்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் ஆசிரியர் அடித்ததாகக் கூறியுள்ளார். பின்னர், பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் வகுப்புக்குள் நுழைந்து ஆசிரியர் கஜேராவை சரமாரியாகத் தாக்கினர்.
இதுகுறித்து ஆசிரியர் தரப்பும் மாணவன் தரப்பும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து ஆஷாதீப் பள்ளிக்கு ஆசிரியர்கள் வர மறுத்துள்ளதாகத் பள்ளி நிர்வாகத் தரப்பினர் கூறியுள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் இருதரப்பினரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.