நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் கடிநெகிழி
தான் சேர்ந்து விடின். – திருவள்ளுவர் இப்படித்தான் மில்லினியர்களுக்காக எழுதியிருப்பார்.
புதிய இந்தியா, சுத்தமும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார். தேசத்தந்தை பிறந்தநாளில் தாயுள்ளம் கொண்டு தூய்மை பாரதம் திட்டத்தை 2014ல் அறிவித்தார். மகாத்மாவின் 150வது பிறந்தநாளில் கடிநெகிழியை கைவிட கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களிடம் பிரதமர் கொண்டுள்ள அன்பாலும், அத்திட்டங்களை தனது வாழ்விலும் கடைபிடித்து முன்மாதிரியாக திகழ்கிறார். அதில் ஒரு நிகழ்வுதான் கோவளம் கடற்கரையில் அவர் குப்பைகளை அகற்றியது.
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறையின் டாக்குமெண்டரிக்காக பிரதமர் நடித்தார். அது வேர், இது வயர்….
ஒத்தைச் செருப்பு சினிமா அவருக்கு பிடித்துவிட்டது. விரைவில் தமிழக அரசியல் தூய்மைப் படுத்தப்படும்.. என்பதுபோன்ற மீம்கள், கிசுகிசுக்களை ஓரம் கட்டிவிட்டு இந்நிகழ்வை பார்க்கவேண்டும். பிட் இந்தியா, தூய்மை இந்தியா இரண்டையும் சேர்த்து பிரபலப்படுத்துகிறார் பிரதமர்.
’குப்பைக்கேணும் குனிந்து நிமிர்’ என்று சொல்லாமல் சொல்கிறார். காலையில் ஜாக்கிங் போகும்போது குப்பையை அகற்றுவது கலாச்சாரமாகி உள்ளது.
ப்ளாக்கிங் PLOGGING என்று அதற்கு பெயர். சுவீடனில் தோன்றிய அக்கலாச்சாரம் இந்தியாவிலும் பரவிவருகிறது.
ரிபுதமான் பெல்வி என்ற ஓட்டப்பந்தய வீரர் அதற்கான பணியில் முன்னோடியாக உள்ளார். பிளாஸ்டிக் விரதம் #PLASTICUPVAAS என்ற ஹேஷ்டேக்கில் சமூக ஊடகத்தில் பிரபலமாக இயங்கிவருகிறார். ப்ளாக்கிங் விழிப்புணர்வுக்காக செப்டம்பர் 5முதல் நாடு முழுவதும் தொடர் ஓட்டம் நடத்திவருகிறார்.
நகராட்சிகள் சட்டம் 2000ல் குப்பைகளை தரம் பிரிப்பதை வலியுறுத்துகிறது. மத்திய பட்ஜெட்2013 குப்பை ஒழிப்பு, குப்பை மறுசுழற்சி திட்டங்களை ஊக்குவிக்கிறது. ஆனால், நகரவாசிகள் குப்பையை சேர்த்துக்கொட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 60மில்லியன் டன் குப்பைகள் குவிகின்றன. அவற்றில் 6 நகரங்களில் மட்டுமே 50 மில்லியன் டன் குப்பைகள் சேர்கின்றன. மக்களிடையே புழகத்துக்கு வரும் ப்ளாஸ்டிக் பொருட்களில் 80சதவீதம் குப்பைகளாகவே கொட்டப்படுகின்றன.
கடலோரம், நதியோரம் கட்டட இடிபாடுகள் மலைமலையாக குவிக்கப் படுகின்றன. இடிபாட்டு குப்பைகள் முழுவதும் மறுசுழற்சி செய்வதற்கான வாய்ப்புள்ளவை. ஆனால், ப்ளாஸ்டிக் கழிவுகளால் உருவாகும் மீத்தேன் வாயு மிகவும் கொடூரமானது. கார்பண்டை ஆக்சைடை விடவும் 20மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, குப்பை பிரச்னைக்கான தீர்வில் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய முன்வரவேண்டும். பிரதமரை பின்பற்றி தினந்தோறும் ப்ளாக்கிங் செய்யவேண்டும்.
நாங்களும்கூட #WETOO என்று ஹேஷ்டேக் செய்து அவரவர் செய்துவரும் ப்ளாக்கிங் பணியை உலகறிய செய்யவேண்டும். வீடும், நாடும் நன்றாகி, பிரதமரின் நரேந்திரமோடியின் புதிய இந்தியா ஜொலிக்கட்டும்.
- ஜி. ஸ்ரீமாரிசெல்வம், பெங்களூர்.