தாமதமாக வந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் இரு நண்பர்களை மோதித் தள்ளியது. ரயில் லேட்டாக வந்தது, நண்பர்களின் உயிரழப்புக்குக் காரணமாகி விட்டது.
நண்பர்கள் இருவர், தினமும் அதே வழியாக நடந்து சென்று நதியில் குளித்து திரும்புவது வழக்கம். ஆனால் அன்று அவர்கள் குளித்துவிட்டு வந்தார்களே தவிர ரயில்வே டிராக்கைத் தாண்டி வீடு வந்து சேரவில்லை.
அந்த நேரத்திற்கு எந்த ரயிலும் வராது என்பது அவர்களின் எண்ணம். அதனால்தான் எப்போதும் போல் ரயில்வே ட்ராக் வழியாக நிதானமாக நடந்து சென்று கிருஷ்ணா நதியில் குளித்தார்கள். திரும்பி வரும்போது ரயில் மோதி விபத்தில் மரணம் அடைந்தார்கள். இந்த துயரச் சம்பவம் குண்டூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
‘தாடேபல்லி’ நகர் கிருஷ்ணா கேனால் ஜங்ஷன் அருகில் ரயில் மோதி இரு நண்பர்களும் மரணமடைந்தனர்.
தாடேபல்லியைச் சேர்ந்த சுப்பாராவு (55), வெங்கடரமணா (53) எப்போதும்போல் விஜயவாடாவில் இருந்து குண்டூர் நோக்கிச் செல்லும் டிராக் மீது நடந்து வரும்போது பின்னால் இருந்து வந்த ரயில் மோதி அங்கேயே மரணித்தனர்.
சுப்பாராவு கொல்லர் உலை வேலை செய்பவர். வெங்கடரமணாவும் அவருடனேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒன்றாகவே குளிக்கச் செல்வது வழக்கம். அன்று மழை காரணமாக சற்று தாமதமாகக் கிளம்பினார்கள்.
எந்த நேரத்தில் எந்த ரயில் வரும் என்பது அவர்களுக்கு அத்துபடி. அதனால் தைரியமாக டிராக் மேல் நடந்து சென்றார்கள். ஆனால் தாமதமாக வந்த திருமலா எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. நான்கு கிலோ மீட்டர் வரை அவர்களை இழுத்துச் சென்றது.
நண்பர்கள் இருவருக்கும் சரியாகக் காது கேட்காது என்பதால் தூரத்தில் ரயில் வரும் சத்தத்தை அவர்கள் கேட்கவில்லையாம். அருகில் ரயிலைப் பார்த்தவர்கள் நகர்வதற்குள் விபத்து நடந்துவிட்டது என்கிறார்கள்.