வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக்கோரி நாடு தழுவிய அளவில் அக்.22 செவ்வாய்க்கிழமை இன்று வங்கி ஊழியர்கள் சுமார் 3 லட்சம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப் பட்டு, 4 வங்கிகளாக மாற்றப்படும்.
ஆனால், இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வங்கிகள் இணைப்பு என்ற பெயரில் மத்திய அரசு ஆண்டுக்கு சுமார் 80,000 இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுப்பதாக வங்கி ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
எனவே, இதனைக் கண்டித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
முன்னதாக, இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்த போது, இந்தப் போராட்டத்தை திரும்பப் பெற வைக்க, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இதை அடுத்து இன்று திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் 35,000 பேர் உட்பட நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
எனினும் இந்த வேலை நிறுத்தத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஊழியர்கள் அதிக அளவில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.