ஹரியானாவில் பாரதிய ஜனதா,- ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி முடிவானது. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க, தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில்: துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதனை கவர்னரிடம் தெரிவிப்போம். மேலும் ஜே.ஜே.பி., கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பை வழங்குவோம் என்றும் கூறினார்.
நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., 40 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், சுயேட்சை 6 இடங்களிலும், ஜனநாயக ஜனதாகட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான இடங்களை காட்டிலும் அனைத்து கட்சிகளும் குறைவான இடங்களை பெற்றிருப்பதால் தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டது.
தேர்தல் முடிவுக்கு பின்னர் தில்லியில் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி மீண்டும் மனோகர்லால் கட்டார் முதல்வராக தொடர்வார் என கூறினார். இதனையடுத்து சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 6 பேரும் பா.ஜ., ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இந்திய ஜனநாயக கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் துஷ்யந்த்சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது எனவும் , அமைச்சர் பதவி தருவது உள்ளூர் வேலைவாய்ப்பில் 75 அளவிற்கு சவுதாலா கட்சி சொல்லும் பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிப்பது என்பன உட்பட கோரிக்கைகள் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.