படிப்பது ஏழாம் வகுப்பு ….வேலை பார்ப்பது ஐடி உத்தியோகம்! மாதம் 25 ஆயிரம் ரூபாய் கௌரவ சம்பளம்.
வாரத்தில் மூன்று நாள் வேலை… மூன்று நாள் பள்ளிக்கூடம் …!
அந்த மாணவன் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு சென்று பாடம் படிப்பான். மீதி மூன்று நாட்கள் சாஃப்ட்வேர் கம்பெனியில் டேட்டா சயின்டிஸ்ட் பணி புரிவான் . சிறுவயது முதலே பெற்றோர் உற்சாகப் படுத்தியதால் 12 வயதிலேயே சாப்ட்வேர் உத்தியோகத்தை பெற்றுள்ளான்.
குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்தவர்கள் பி. ராஜ்குமார், பிரியா தம்பதியினர். ஹைதராபாதில் கேப்ஜெமினி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். மணிகண்டா என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் மகன் சரத் உள்ளூர் ஸ்ரீசைதன்யா பாடசாலையில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.
சாப்ட்வேர் வேலை பார்க்கும் தாயும் தந்தையும் தினமும் வீட்டில் லேப்டாப்பில் வேலை செய்வதை கவனித்து வந்தான் சிறுவன் சரத். அதனால் ஏழாம் வயதில் இருந்தே அவனுக்கு கோடிங் ஜாவா போன்ற சாப்ட்வேர் களின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அவற்றை சிரத்தையோடு பயின்றான்.
அவனிடம் இருந்த திறமையை கவனித்த பெற்றோர் அவனை ஐடி வேலையில் சேர்த்து விட முடிவெடுத்தனர். பல ஐடி கம்பெனிகளுக்கு வேலைக்கு விண்ணப்பித்தனர். இன்டர்வியூ களுக்கும் சென்று வந்தான் சரத்.
அண்மையில் ‘மொண்டைக்நே’ கம்பெனியில் மாதம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கௌரவ சம்பளத்தில் சரத்திற்கு டேட்டா சயின்டிஸ்ட் வேலை கிடைத்துள்ளது.
அதோடுகூட வாரத்தில் மூன்று நாள் உத்தியோகம் மூன்று நாள் பள்ளிக்கூடம் என்ற வேண்டுகோளையும் அவர்கள் ஏற்றனர்.
12 வயதில் ஏழாம் வகுப்பு படித்த ஐடி வேலை பார்க்கும் சரத்தை கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். செவ்வாய் அன்று பெற்றோருடன் சென்று அமைச்சரை சந்தித்தான் சிறுவன் சரத்.