மகாராஷ்ட்ர அரசியல் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. நீங்கள் ஹிந்துத்துவ சக்திகளைப் பிரிக்க நினைத்தீர்கள்… நீங்கள் பிரிவுபட்டுவிட்டீர்கள் என்று கூறியுள்ளார்.
நேற்று இரவு வரை மகாராஷ்டிரத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று கூறப் பட்ட நிலையில், திடீரென இன்று காலை பாஜக.,வின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தேசியவாத ஜனநாயகக் கட்சியின் அஜித் பவார் ஆதரவாளர்களுடன் ஆதரவு அளித்துள்ளார். மேலும், துணை முதல்வராகவும் அஜித் பவார் பதவி ஏற்கிறார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கை நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ளதாகவும், சரத் பவார் அனுமதி இல்லாமல், அவரது உறவினர் அஜித் பவார் தலைமையில் ஒரு பிரிவு பாஜக., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப் பட்டது. இதனால் விரக்தி அடைந்த சரத் பவாரின் மகள் சுப்ரியா, கட்சி மட்டுமல்ல குடும்பமும் பிரிவு பட்டுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, தமது டிவிட்டர் பதிவில்…
தேசத்துக்கான செய்தி இதுதான்: நீங்கள் ஹிந்துத்துவ இயக்கத்தை பிரிக்க நினைத்தால், நீங்கள் பிரிக்கப் படுவீர்கள் என்பதுதான் அது!
முதல் நாள் முதலாக… நான் கெஞ்சிக் கொண்டிருந்தேன். இந்துத்துவ சக்திகள் பிளவுபடாமல் காப்பதற்கு, முதல்வர் பதவியைத் தியாகம் செய்யும் அளவுக்குக் கூட தயங்கக் கூடாது என்று கோரினேன். ஆனால் அதற்கான வாய்ப்பும் பயனும் இல்லாது போய்விட்டது. எனவே, பிரதான இந்துத்துவத்தைப் பாதுகாப்பதற்கான பதிலடியாக மட்டுமே பிளவு சக்திகளை பிரிப்பது தேவையானதாகிவிட்டது. பிடிக்கள் ஏமாற்றமடைந்தனர். – என்று குறிப்பிட்டுள்ளார்.