முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த நிதி முறைகேட்டு வழக்கில், சிபிஐ., தொடர்ந்து அமலாக்கத்துறையினால் கைது செய்யப் பட்டு இன்று நூறாவது நாளாக திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது, உச்ச நீதிமன்றம்.
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, சிதம்பரத்தை சிறையில் வைத்திருப்பது ஏன் என மத்திய அரசு தரப்பு இன்று வாதிட்டது.
தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடை விலகியதும், இந்த வழக்கில் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியுள்ளார்.
சிபிஐ வழக்கில் மட்டுமே கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன், என்றும், அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய
நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணையின் போது, சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்ட கருத்தில்… ஐஎன்எக்ஸ் மீடியாவுடன் எனக்கு ஏதாவது ஒரு இமெயில் தொடர்போ, தொலைபேசி உரையாடலோ, அல்லது எனக்கும் அதற்குமான நிதி பரிவர்த்தனையோ ஏதாவது ஒன்றைக் காட்டி நிரூபித்தால், நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று கூறப் பட்டது.
இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், தேதி குறிப்பிடாமல் ஜாமீன் மனு ஒத்திவைக்கப் பட்டது.