அந்த விக்ரம் லேண்டர் நாசாவின் கண்களில் பட்டது. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.
இந்தியா கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விக்ரம் லேண்டரை விண்ணுக்கு அனுப்பியது. ராக்கெட் சரியான பாதையில் சரியான தொலைவில் சென்ற நிலையில் இறுதிக் கட்டத்தில் செப்.7ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறங்குவதற்கு 2 கி.மீ., தொலைவுக்கு முன்னதாக தகவல் தொடர்பை இழந்தது.
இது, இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. நீண்ட நாட்கள் முயற்சி செய்தும், விக்ரம் லேண்டருடனான தொடர்பை சரி செய்ய முடியவில்லை. இந்தியாவின் முயற்சிக்கு நாசாவும் உதவியாக இருந்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இறங்கியது. இந்நிலையில், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டதாக நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் – 2 சுமந்து சென்ற லேண்டாரின் உதிரி பாகங்களின் இருப்பிடத்தை கண்டறிய மதுரை பொறியாளரே உதவியுள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த தகவலே காரணம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது!
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டறிவதற்காக பல ஆய்வாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேடியதாகவும், அதில் சண்முக சுப்ரமணியன் என்ற இந்திய பொறியாளர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் என்று கூறப்பட்ட அந்த இடத்தில் அவை இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் என தெரிவித்துள்ளனர்.
விக்ரம் லேண்டாரின் உதிரி பாகங்களை புகைப்படமாக நாசா வெளியிட்டதோடு அதற்கு எஸ் என்ற பெயரையும் வைத்துள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவான தரையிறங்கலை திட்டமிட்டு, ஆனால் எதிர்பாராத விதமாக வேகமான தரையிறங்கலால் நிலவின் தரைத்தளத்தில் மோதி சேதமடைந்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை ஒரு தமிழர் கூறிய தகவல் தான் நாசா கண்டறியவும் உதவியாக இருக்கிறது!
சந்திரயான் 2 திட்டக் குழு இஸ்ரோவின் தலைவர் தமிழரான சிவன் தலைமையில் இயங்குகிறது. மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் தான் தற்போது அந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாஸா, அவருக்கு மின்னஞ்சல் வாயிலாக செய்திகளை தெரிவித்து, அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
இதனை சண்முக சுப்ரமணியன் தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார்.