உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய அண்டை நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்து குடியுரிமை பெற்று இந்தியாவின் அனைத்துவிதமான சலுகைகளையும் பெற்று வசிக்க எண்ணும் அண்டை இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை மறுக்கப் படும் சூழல் ஏற்படும் என்பதும் தெளிவாக்கப் பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப் படுவது, இந்தியாவின் மத சார்பின்மைக்கு எதிரானது என்று கூறின. இருப்பினும், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமியர்களை ஓட்டுவங்கியாக பயன்படுத்தி இஸ்லாமிய மயமாக்கத்தை ஊக்குவித்திருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும், மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்கள் இதற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஊருடுவல்காரர்களால் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவைத் தாக்கல் செய்து, பேசினார். அப்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.