உத்தரப்பிரதேசத்தில் வன்முறையின் போது 18 பேர் இறந்ததற்கு பொறுப்பு போராட்டக்காரக்கள் தான் என்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதும் அவர்கள்தான் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம், டெல்லியில் வன்முறையில் வெடித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் காஸியாபாத், அம்ரோஹா, ஃபரூகாபாத், புலந்த்சாகர், முஸாபர்நகர் உள்பட பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
இதில் மாநிலத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். வாரணாசியில் ஒரு வன்முறை கும்பலை காவல் துறையினர் விரட்டிச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 வயது சிறுவன் இறந்துவிட்டான்.
கடந்த வியாழக்கிழமை முதல் 18 பேர் உயிரழந்துள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டை தாங்கள் நடத்தவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ஒரு புல்லட்டை கூட நாங்கள் பயன்படுத்தவில்லை.
இதில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். எங்களது துப்பாக்கிச் சூட்டால் யாரேனும் இறந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
போராட்டக்காரர்கள் காவல்துறையினர் நோக்கி சுட்ட போதில் அதில் அவர்களில் சிலர் உயிரிழந்து விட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விட வெளியில் வந்தவர்களே வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்படுவர்.
பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீட்டை எப்படி பெறுவது என்பது குறித்து காவல்துறை சட்டரீதியாக ஆலோசனை நடத்தி வருகிறது. இது வரை வன்முறை நடந்த இடங்களில் இருந்து 405 காலி புல்லட்களை கைப்பற்றியுள்ளோம்.
இறந்த 18 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இறந்தவர்கள் உடலில் நாட்டுத் துப்பாக்கி குண்டு துளைத்ததால் அவர்கள் இறந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 1000 முறை தோட்டாக்கள் வெடித்தன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.