“ஆளும் இல்லையாம்… சூலும் இல்லையாம்… பிள்ளை பேர் சோமலிங்கமாம்”… என்ற பழமொழியை போல பவன் கல்யாண் மத்திய அமைச்சரா? இந்த பழமொழியைப் போல்தான் உள்ளது இப்போது பவன் கல்யாண் பற்றி வரும் வதந்திகள்
இப்போதுதான் பிஜேபி யோடு கைகுலுக்கினார். அதற்குள் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்று சிலர் ஊகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒருபுறம் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகி கொண்டே உள்ளது.
சற்று முன்வரை கம்யூனிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்து ஆறு மாதம் கழித்து விட்டு.. இப்போது காஷாயம் கட்டப் போகிறார் என்று அவர் மீது தீவிர விமர்சனம் உள்ளது. தேர்தல் நேரத்தில் பிஜேபியை பலவிதத்திலும் விமர்சித்தவர்களுள் பவன் கல்யாணும் ஒருவர்.
” தேர்தல் வருவதால் பிஜேபி பாகிஸ்தானோடு போர் எடுத்து வருகிறது” என்று விமர்சித்தவர் பவன். ” நான் மோடிக்கு உறவும் அல்ல.. அமித்ஷாவுக்கு தம்பியும் அல்ல…” என்றெல்லாம் ஏதேதோ பேசினார் பவன் கல்யாண். அப்படிப்பட்டவர் இப்போது பிஜேபியோடு கைகுலுக்கி உள்ளார்.
அப்போது “ஜெகன் பிஜேபியோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்” என்று வகைவகையாக விமர்சித்த பவன் கல்யாண் இப்போது அதே பிஜேபியோடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஒப்பந்தம் மட்டுமே . போகப்போக ஜனசேனா பிஜேபியில் ஐக்கியமாகி மாயமாக போகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.
கடந்த காலத்தில் அண்ணன் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி காங்கிரசில் இணைந்து மாயமானது போலவே இப்போது தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா கூட ‘காயப்’ ஆகி விடும் என்று நம்புகிறார்கள் பலர்.
முன்பு சிரஞ்சீவிக்கு இதேபோல் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால் அப்போது சிரஞ்சீவியின் பின்னால் 18 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அவர்களின் தேவை காங்கிரசுக்கு இருந்தது. ஜகன் கையைவிட்டு நழுவியதால் சிரஞ்சீவியை வைத்து அரசியல் செய்யலாம் என்று காங்கிரஸ் தலைமை கனவு கண்டது.
பவன் விஷயத்தில் எம்எல்ஏவாக கூட இவர் வெற்றி பெறவில்லை. வென்ற ஒரே ஒரு ஜனசேனா எம்எல்ஏவும் இவர் பின்னால் நடப்பவராக இல்லை. இந்த பின்னணியில் பவனுக்கு மத்திய அமைச்சர் பதவியா என்று விமர்சனம் எழுகிறது.