மங்களூரு விமான நிலைய வெடிகுண்டு சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய ஒருவரை கைது செய்துள்ளதாக கர்நாடகக் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
“திங்களன்று மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு நிறப் பை ஒன்று கிடந்தது. இது குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மங்களூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்தப் பையைக் கைப்பற்றி சோதனை செய்ததில், அதில் 3 உயர் ரக வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விமான நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு இருந்த பையை வெடிகுண்டு மீட்பு வாகனத்தில், விமான நிலையத்தில் இருந்து சற்று தூரத்திலுள்ள, ஒரு மைதானத்துக்கு எடுத்து சென்று வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர்.
இதற்கிடையே வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சமயத்தில் மங்களூரில் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு வைத்துவிட்டதாக மர்ம நபர் ஃபோனில் மிரட்டல் விடுத்தார்.
விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்றும் நடுவானில் வெடித்து சிதறும் என்று கூறியதும் இணைப்பை துண்டித்து விட்டார்.
விமானம் உடனடியாக மங்களூரில் தரை இறங்கி சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் அதிலிருக்கவில்லை. இந்த சம்பவங்களால் மங்களூரில் நேற்று பெரும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் இந்த வெடிகுண்டை வைத்தது யார் என போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இன்று பெங்களூர் காவல் நிலையத்தில் ஆதித்யா ராவ் என்பவர் போலீஸாரிடம் சரண் அடைந்தார்.
“ராவ் ஒரு சோதனைக்காக அரசு நடத்தும் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார், பின்னர் அவரது காவலுக்காகவும், இந்த வழக்கின் விசாரணைக்காகவும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என்று அந்த அதிகாரி கூறினார்.