ககன்யான் திட்டம் நீண்டகால சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது,
ககன்யான் திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது மட்டுமல்ல, இந்தப் பணி நீண்ட கால தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
விஞ்ஞான கண்டுபிடிப்புகள், பொருளாதார மேம்பாடு, கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இளைஞர்களை ஊக்குவித்தல் ஆகியவை அனைத்து நாடுகளின் இலக்காக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்ய மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சரியான தளத்தை ஏற்படுத்தித் தரும் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,
விண்வெளிக்கு அனுப்ப 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷியா சென்று பயிற்சி பெறவுள்ளனர். 1984 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா, ரஷிய விண்கலத்தில் பறந்தார், ஆனால் இந்த முறை இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவில் இருந்து, இந்திய விண்கலத்தில் பறக்கவுள்ளனர்.
சந்திரயான்-3 பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சந்திரனுக்கும் மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது. ஆனால், அதற்கான திட்டம் சிலகாலம் கழித்து தான் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.