கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாநில ஆளுநர்களுக்கு அவமரியாதையும் அவமதிப்பும் நிகழ்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையேயான மோதல், ஒரு மோசமான கட்டத்துக்குச் சென்றுள்ளது. ஆளும் கட்சி மற்றும் கம்யூனிஸ அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால், கோல்கட்டா பல்கலை பட்டமளிப்பு விழாவில் இருந்து, மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் வெளியேறினார்.
மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து ஜகதீப் தங்கருக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், அவரது அமைச்சரவை சகாக்களும் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார். ஆனால், வேந்தருக்கான அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், சட்டசபையில் சில புதிய விதிகளை மம்தா பானர்ஜி அரசு கொண்டு வந்தது. அதன்படி பல்கலைக் கழகத்தின் உள் விவகாரங்களில் ஆளுநர் நேரடியாக தலையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநரை அவமதிப்பது போல், கோல்கத்தா பல்கலை., பட்டமளிப்பு விழாவில் சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது போல் இன்னொரு மாநிலமான கேரளத்திலும், மாநில ஆளுநருக்கு எதிரான போக்கைக் கையாண்டு வருகிறது மாநில அரசு. கேரளாவில் ஆண்டின் முதல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற வந்த ஆளுநரை தடுத்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள சட்டப்பேரவையில், நிகழாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆரீஃப் முகமது கான் உரையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த ஆளுநரை, சட்டப்பேரவை வளாகத்தில் வரவேற்ற முதலமைச்சர் பிணராயி விஜயன், அவரை பேரவைக்குள் அழைத்து வந்தார். அப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி, ஆளுநரை உள்ளே விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அவைக் காவலர்களின் பாதுகாப்புடன், ஆளுநர் ஆரிஃப் முகமது கானை முதலமைச்சர் பிணராயி விஜயன் உள்ளே அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார். அப்போது, ஆளுநர் தனது உரையில் மாநில அரசின் நடவடிக்கைகளை மையப்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களை படிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.
இதனால், ஆளுநருக்கு காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், சபாநாயகர் இருக்கை முன் திரண்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி நிலவியது.! தொடர்ந்து, ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்ட எம்எல்ஏக்கள், சபை காவலர்களால், கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் உரையை ஆளுநர் ஆரிஃப் கான் வாசித்தார்.
இதே போல், புதுச்சேரி, புது தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள், துணை நிலை ஆளுநருக்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல், மோதல் போக்குடன் நடந்து கொண்டிருப்பது இந்திய ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அமைந்திருந்தது.